இதுவரை என்னை பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைத்ததில்லை... பாலியல் தொல்லை குறித்து வாய்திறந்த ஐஸ்வர்யா ராய்
இதுவரை நான் பட வாய்ப்புக்காகப் படுக்கை பிரச்சினையைச் சந்தித்தது இல்லை, பிடிக்காதவற்றைச் செய்ய முடியாது என்று கூறி நடையைக் கட்டுங்கள் மாற்றம் தானாக வரும் என நடிகை ஐஸ்வர்யா ராய் கருத்து தெரிவித்துள்ளார்.
17ஆவது முறையாக கான் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு நேற்று இந்தியா திரும்பிய ஐஸ்வர்யா ராய். திரைத் துறையில் நடிகைகள் பாலியல் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்கள். நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திரைத் துறையில் உள்ள பாலியல் பாகுபாடு குறித்து நடிகை ஐஸ்வர்யா ராய் கருத்து தெரிவித்துள்ளார். “நடிகர், நடிகைகளுக்குச் சம்பளம் கொடுப்பதில் இருக்கும் பாகுபாடு நாம் தேர்வு செய்வதில்தான் உள்ளது. நல்லது, கெட்டது என்பதில் நாம் எதை தேர்வு செய்கிறோம் என்பது முக்கியம். பிடிக்காதவற்றைச் செய்ய முடியாது என்று கூறி நடையைக் கட்டுங்கள். மாற்றம் தானாக வரும்.
நடிகைகளுக்குச் சம்பளம் குறைவாகத் தருகிறார்கள் என்று நினைத்தால் அந்தப் படத்தில் நடிக்க முடியாது என்று கூற வேண்டும். சிலர் முடியாது என்கிறார்கள்; சிலர் ஒப்புக்கொள்கிறார்கள். சம்பள பாகுபாடு, வேலை இடத்தில் பாலியல் தொல்லை ஆகியவற்றை எதிர்த்து ஹாலிவுட்டில் இயக்குநர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் என்று 82 பெண்கள் சேர்ந்து #MeToo இயக்கத்தில் பங்கு கொண்டுள்ளனர். அது பாராட்டுக்குரியது. அதில் நானும் சேர விரும்புகிறேன்.
கடவுளின் அருளால் இதுவரை நான் பட வாய்ப்புக்காகப் படுக்கை பிரச்சினையைச் சந்தித்தது இல்லை. நான் சினிமாவுக்குப் புதிது அல்ல. ஆனால், என் கதை வேறு. சீனியர்களும் சக நடிகைகளும் தங்களுக்கு நடந்தது பற்றி பேசும்போது நான் காதைப் பொத்திக் கொண்டு இருக்க முடியாது.
மேலும், பேசிய ஐஸ்வர்யா ராய் கான் திரைப்பட விழாவில் நான் அணிந்த உடைகள், மேக்கப்புக்காக பலர் கிண்டல் செய்தார்கள். அன்பு அதிகம் கிடைப்பதால் கேலி கிண்டலை கண்டுகொள்வது இல்லை. எனக்குப் பயம் என்பதே கிடையாது” என்று கூறியுள்ளார்.