நடிகர் விஜய்யை தொடர்ந்து தனுஷ்... நுழைவு வரி வழக்கில் நாளை தீர்ப்பு...!
சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி தனுஷ் தொடர்ந்த வழக்கில் நாளை முக்கிய உத்தரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு வரி விலக்கு கோரி நடிகர் தனுஷ் 2015ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் நுழைவு வரி செலுத்த வேண்டுமென வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தனுஷ் தொடர்ந்த வழக்கில், 50 சதவீத வரியை செலுத்தினாலே சொகுசு காரை பதிவு செய்து கொள்ளலாம் என வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அந்த வழக்கு தற்போது நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார் நீதிபதி. மேலும் 5ம் தேதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நாளை வழக்கு தொடர்பாக முக்கிய உத்தரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் தன்னுடை ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அபராத தொகையான ரூ.1 லட்சத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமென கோரி விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் ஹேமலதா அமர்வு, விஜய் மீதான அபராததிற்கு இடைக்கால தடை விதித்தும், விஜய்யிடம் இருந்து மீத நுழைவு வரியை வசூலித்து அவருக்கு அதற்கான சலான் வழங்கும்படியும் வரி துறைக்கு உத்தரவிட்டனர்.