படுக்கையிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதாகவும், எழுந்து நடக்கவே 5 மாதமாகும் என்றும் யாஷிகா தன்னுடைய உடல் நிலை குறித்து வெளியிட்ட உருக்கமான பதிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

கடந்த ஜூலை 25ம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பிய, யாஷிகா ஆனந்த் டாடா ஹேரியர் காரை படுவேகமாக ஓட்டியுள்ளார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவணி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் இருக்கையில் இருந்ததால் யாஷிகாவின் நண்பர்கள் அமீர், சையது ஆகியோர் சிறு காயங்களுடன் தப்பியதாக தெரிகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விபத்தில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தற்போது சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். யாஷிகாவிற்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது யாஷிகா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு சற்றே உடல் நலம் தேறிய யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழியான வள்ளி செட்டி பவணி மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டிருந்தார். 

அதேபோல் விபத்தின் போது தான் குடிக்கவில்லை என்றும், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார். மேலும் படுக்கையிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதாகவும், எழுந்து நடக்கவே 5 மாதமாகும் என்றும் யாஷிகா தன்னுடைய உடல் நிலை குறித்து வெளியிட்ட உருக்கமான பதிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இவன்தான் உத்தமன், ராஜபீமா, கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் யாஷிகாவின் கைவசம் உள்ளன. மேலும் சில படங்களில் அவர் நடித்து கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுவரை யாஷிகா உழைத்து சம்பாதித்த பணத்தில் பெரும் தொகையை அவர் மருத்துவமனை பில்லுக்காகவே செலவிட வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. போதாக்குறைக்கு யாஷிகா ஆனந்த் எழுந்து நடக்கவே 5 மாதத்திற்கு மேல் ஆகும் என அவர் கூறியுள்ளதால், யாஷிகாவை வைத்து படமெடுக்க ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் வேறு நடிகைகளை ஒப்பந்தம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கோர விபத்தில் இருந்து மீண்ட யாஷிகாவிற்கு அடுத்தடுத்து இப்படியொரு நிலையா? என ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.