’சிவாஜியை விட கம்பீரமாக நடக்க கூடியவர் நம்பியார்’...பிரபல நடிகர் கருத்து...
தமிழ் சினிமாவில் வில்லன் என்று சொன்னால் தலைமுறைகள் தாண்டியும் முதல் நபராக நினைவுக்கு வருபவர் எம்.என்.நம்பியார். கமல் நடித்த உத்தம வில்லன் பட்டம் இவருக்குத்தான் பொருந்தும் என்று சொல்கிற அளவுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் அவ்வளவு நல்லவர் என்று பெயர் பெற்றவர். மார்ச் 7, 1919-ல் பிறந்த இவர் 2008-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி மறைந்தார்.
நடிகர் சிவக்குமார் சமீபகாலமாக எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் கூடவே சில சர்ச்சைகளைக் கொண்டு வந்து நிறுத்துகிறவர் என்று சொல்லப்படுகிற நிலையில் நேற்றைய நிகழ்ச்சி ஒன்றில்,’நடிகர் நம்பியார் சிவாஜியை விட கம்பீரமாக நடக்க கூடியவர்' என்று புகழ்ந்து சிவாஜி ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வில்லன் என்று சொன்னால் தலைமுறைகள் தாண்டியும் முதல் நபராக நினைவுக்கு வருபவர் எம்.என்.நம்பியார். கமல் நடித்த உத்தம வில்லன் பட்டம் இவருக்குத்தான் பொருந்தும் என்று சொல்கிற அளவுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் அவ்வளவு நல்லவர் என்று பெயர் பெற்றவர். மார்ச் 7, 1919-ல் பிறந்த இவர் 2008-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி மறைந்தார். இது நம்பியாருக்கு நூற்றாண்டு. அவர் மறைந்த நாளான நேற்று அவரது குடும்பத்தினர் சார்பாக நம்பியாரை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நம்பியாரின் மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் நம்பியார் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், இயக்குனர்கள் எஸ்பி.முத்துராமன், பி.வாசு, இசையமைப்பாளர் இளையராஜா. நடிகர்கள் சிவகுமார், ராஜேஷ், டெல்லி கணேஷ், நடிகைகள் காஞ்சனா, வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, விஜயகுமார் ஐபிஎஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
அப்போது அந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவக்குமார், ‘1955-ல் பெண்ணரசி என்ற படத்தில் நம்பியார் அண்ணன் நடித்தார். அவர் சல்யூட் அடிக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. நம்பியார் சிவாஜியை விட கம்பீரமாக நடக்க கூடியவர். அந்த காலத்தில் நடித்த அனைவருமே உண்மையிலேயே பலசாலிகள். அந்த வரிசையில் வந்தவர் நம்பியார். அவருடன் நடித்த அனுபவங்கள் இனிமையானவை.அவர் நினைத்து இருந்தால் பெரிய கதாநாயகனாக வலம் வந்து இருக்கலாம். அவர் ராமனாகவே வாழ்ந்தார். மனைவியை தவிர வேறு பெண்ணை தவறாக பார்த்ததுகூட கிடையாது. மது, புகை இல்லாமல் கடைசிவரை வாழ்ந்து காட்டியவர்’ என்றார்.