கரூரில் தமிழக வெற்றிக் கழக பரப்புரையின் போது நடந்த அசம்பாவிதம் தொடர்பாக பல்வேறு பிரபலங்கள் பேசி வரும் நிலையில், நடிகை சசி லயா பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Sasi Laya About Karur Tragedy : கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த செப்டம்பர் 27ந் தேதி தவெக தலைவர் விஜய், பரப்புரை மேற்கொண்டார். அப்போது விஜய்யை காண ஏராளமானோர் திரண்டதால் அங்கு, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவர்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தற்போது வரை பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உள்ளது.

இந்த துயர சம்பவத்தில் 18 பெண்கள், 13 ஆண்கள், 5 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் என மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளனர். 110 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 51 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததோடு, 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வைரலாகும் நடிகை சசி லியாவின் வீடியோ

இந்த நிலையில் நடிகை சசி லயா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசி இருப்பதாவது : இதுக்கு கூட நம்ம வாயை திறக்காவிட்டால், நம்மெல்லாம் மனுஷ ஜென்மமே கிடையாது. அத்தனை உயிர்கள் பறிபோயிருக்கிறது. உனக்கான அரசியலை நீ தேர்ந்தெடுக்காவிட்டால், உன்னை வெறுக்கும் அரசியலால் நீ ஆளப்படுவாய் என லினன் சொல்லியிருப்பார். தயவு செஞ்சு எல்லாரும் போராடணும். இங்க மன்றாடுவதால் ஒரு இதுவும் நடக்காது. சேகுவாரா சொன்னது மாதிரி, எல்லாத்துக்கும் போராட கத்துக்கோங்க. போராட முடியலையா, அந்த போராட்டத்தை பற்றி பேசுங்கள், பேச முடியவில்லையா அதைப்பற்றி எழுதுங்கள். எழுதவும் முடியலேனா உதவி பண்ணுங்க.

இங்க என்ன நடக்குதுனே தெரியல, தமிழ்நாட்டுல தான் இருக்கோமானு தெரியல. தமிழக மக்களுக்கு பெரிய நல்ல பழக்கம் இருக்கு... தனக்காக உதவி செஞ்சவங்களுக்கு, தனக்கு நல்லது பண்ணனும்னு சொல்லி வந்தவங்களை தமிழக மக்கள் அவ்வளவு சீக்கிரமா மறக்கும் அளவுக்கு சுயநலமானவர்கள் கிடையாது. இங்க உண்மை என்ன நடந்துச்சுனே தெரியாம பேசுறாங்க பல பேர். உண்மையா என்ன நடந்துச்சுனு தெரிஞ்சும் பேசாம இருக்காங்க சில பேர். ஆனால் இவ்வளவையும் தாண்டி காலம் நிறைய போராட்டங்களை கொடுக்கும். நிறைய போராட்டங்களுக்கு பிறகு நல்ல ஒரு தலைவனை கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு நான் இருக்கிறேன். மக்களை வச்சு அரசியல் செய்யாதீங்க, மக்களுக்காக அரசியல் செய்யுங்க என உணர்ச்சி பொங்க நடிகை லியா பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

View post on Instagram