Minnal Deepa: வா மா மின்னல்.... தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி- உற்சாகத்தில் ‘மாயி’ பட நடிகை
20 ஆண்டு இடைவெளிக்கு பின் சசிகுமாரின் ராஜவம்சம் படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை மின்னல் தீபா.
நடிகர் சரத்குமார் நடித்த, 'மாயி' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை தீபா. இப்படத்தில் வடிவேலு பெண் பார்க்க செல்லும் காட்சியின் போது ‘வா மா மின்னல்’ என வடிவேலு பேசுகிற டயலாக் மிகவும் பிரபலமானது.
அந்த காட்சியில் மின்னல் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் தீபா. இந்த படத்திற்கு பின்னர் மின்னல் தீபா என்றே அழைக்கப்பட்டார். இதையடுத்து சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர், பின்னர் சின்னத்திரை சீரியல்களில் கவனம் செலுத்தி வந்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட தீபா, கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இதையடுத்து கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் சுப்ரமணி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சுமார் 20 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் மின்னல் தீபா. கதிர் இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராஜவம்சம்’ படம் மூலம் அவர் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.