விஜய் ரியல் ஹீரோ தான்... வரிந்து கட்டி கொண்டு சப்போர்ட் செய்த பிரபல நடிகை!
பிரபல நடிகையும், பிஜேபி பிரமுகருமான காயத்ரி ரகுராம் தற்போது விஜய்க்கு ஆதரவாக, ட்விட்டரில் தன்னுடைய கருத்தை பதிவு செய்து விஜய்யை ரியல் ஹீரோ என புகழ்ந்துள்ளார்.
பிரபல நடிகையும், பிஜேபி பிரமுகருமான காயத்ரி ரகுராம் தற்போது விஜய்க்கு ஆதரவாக, ட்விட்டரில் தன்னுடைய கருத்தை பதிவு செய்து விஜய்யை ரியல் ஹீரோ என புகழ்ந்துள்ளார்.
நடிகர் விஜய் வாங்கிய வெளிநாட்டு சொகுசுக்கு காருக்கு வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த சம்பவம், தற்போது வரை விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழ் திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விஜய் எப்போது சிக்குவார் என கன்டென்ட் தேடிக்கொண்டிருந்த சிலர் சமூக வலைத்தளத்தில் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்க்கு விஜய் ரசிகர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அதாவது கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஏற்கனவே விஜய் தரப்பில் இருந்து நுழைவு வரி செலுத்தி விட்ட நிலையில், அதற்க்கு வரி விலக்கு கேட்டு அளிக்கும் படிதான் விஜய் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதை சிலர் அவர் வரி காட்டாதது போல் தகவலை பரப்பி வந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதியும், வரி என்பது கட்டாயம் செலுத்தப்பட வேண்டியது... நன்கொடை அல்ல என இந்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது மட்டும் இல்லாமல் , முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என கூறியிருந்தார்.
மேலும் தமிழ்நாட்டில் நடிகர்கள் நாடாளும் அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என நீதிபதி அறிவுறுத்தினார். இதுவும் பரபரப்பாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், பிரபல நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
விஜய் உண்மையான ஹீரோவாகத்தான் பலரது வாழ்க்கையில் உள்ளார். பிரதமரின் கொரோனா நிவாரண நிதி, முதலமைச்சர் நிவாரண நிதி என்று அவர் பல்வேறு உதவிகளை செய்திருக்கிறார். பல மாணவர்களை படிக்க வைத்து வருகிறார். பல ரசிகர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்கிறார். நீதிமன்றத்தில் நடந்தது நீதிமன்றத்தோடு விட்டு விட வேண்டும் அவர் செய்த உதவிகளை நாம் மறக்கக் கூடாது இந்த ஒரு விஷயத்திற்காக அவர் செய்த நல்ல விஷயங்களை மறக்க கூடாது என்று கூறியிருக்கிறார்.