பா.ஜ.க.வின் தமிழக தூண் சரிந்தது...விரக்தியுடன் கட்சியை விட்டு வெளியேறிய முன்னணி தமிழ் நடிகை
’சினிமாவை விட அரசியலில் நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அவர்களைப் போல் என்னால் 24 மணி நேரமும் நடித்துக்கொண்டிருக்கமுடியாது. எனவே அரசியலிலிருந்து சற்று ஒதுங்கியிருக்க விரும்புகிறேன்’ என்று அறிவித்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.
’சினிமாவை விட அரசியலில் நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அவர்களைப் போல் என்னால் 24 மணி நேரமும் நடித்துக்கொண்டிருக்கமுடியாது. எனவே அரசியலிலிருந்து சற்று ஒதுங்கியிருக்க விரும்புகிறேன்’ என்று அறிவித்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.
பா.ஜ.க.வுக்காக முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பலருடனும் தொடர்ச்சியாக மல்லுக்கட்டிக்கொண்டிருந்தவர் காயத்ரி. ஒரு கட்டத்தில் பா.ஜ.க. தலைவர் தமிழிசையுடனும் கருத்து மோதல் ஏற்பட்டு பரபரப்பை உண்டாக்கிக் கொண்டிருந்தார். ‘பிக்பாஸ்2’ சீஸன் நிகழ்ச்சியில் சர்ச்சையாகப் பேசியது, குடித்துவிட்டு ரோட்டில் விபத்து ஏற்படுத்துவது என்று அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம் பிடிப்பவர் அவர்.
இந்நிலையில் நேற்று ட்விட்டர் பக்கத்தில் தனது அரசியல் துறவறத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதில் “வெறும் வாய்ச்சவடால்களும் மற்றவர்களைக் குற்றம் சொல்வதுமாக அரசியல் இன்று மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது. சின்னக் குழந்தைகள் சண்டை போல உள்ளது. வழிநடத்த முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை. உருப்படியாக எதுவும் நடப்பதில்லை. மக்கள் என்ன முடிவெடுத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. நம்மால் இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற முடியுமா? எதுவும் நடப்பது போலத் தெரியவில்லை. யாரையும் ஆதர்சமாகப் பார்க்க முடியவில்லை. இப்போதைக்கு எனக்கு அரசியலில் ஆர்வம் குறைந்து வருகிறது. நமக்காக நான் வருத்தப்படுகிறேன். இறுதியில் எல்லோரும் செர்ந்து நம்மைக் காமெடியர்களாக்கிவிடுகிறார்கள்.
அரசியல்வாதி என்பது வில்லன் கதாபாத்திரமே. பேராசை, தந்திர புத்தி என எல்லாம் எதிர்மறை விஷயங்களே. நான் இப்போதைக்கு வெளியிலிருந்து அனைத்தையும் பார்த்து, ஆராய்ந்து, இன்னும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். இன்னும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொள்கிறேன். தீவிரமாக இறங்குவதற்கான நேரம் இதுவல்ல. தேவைப்படும்போது நான் செய்கிறேன். இப்போதைக்கு நான் எந்த கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை. இது எனது தனிப்பட்ட முடிவு.
எல்லாவற்றையும் விடக் கொடுமை இப்போது சினிமாவைவிட, அரசியலில் நடிகர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. போலியான போராளிகள், போலித் தலைவர்கள், போலித் தொண்டர்கள், போலி உறுப்பினர்கள்தான் கடைசியில் நமக்கு மிஞ்சுகிறார்கள். என்னால் இனியும் 24/7 நேரமும் நடித்துக்கொண்டே இருக்கமுடியாது. போதும் இப்போதைக்கு விடைபெறுகிறேன். எல்லோருக்கும் நன்றி’ என்று முத்தாய்ப்பாக முடித்திருக்கிறார் காயத்ரி.