எந்த குற்றமும் செய்யாத போதும், தன்னை அவமானப்படுத்தவும், ஒடுக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக நடிகை பாவனா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் 2017 ஆம் ஆண்டு நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதில் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மலையாள நடிகர் திலீப்புக்கும் இந்த கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சமீபத்தில் நடிகர் திலீப்பின் நண்பரும், பிரபல மலையாள இயக்குனருமான பால சந்திரகுமார் இந்த வழக்கு தொடர்பாக பரபரப்பு வாக்குமூலம் அளித்ததால், இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக மவுனம் காத்து வந்த நடிகை பாவனா, தற்போது முதன்முறையாக இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “இது எளிதான பயணமல்ல. பாதிக்கப்பட்டவளாக இருந்து தப்பி மீண்ட பயணம். கடந்த 5 ஆண்டுகளாக என்னுடைய பெயரும், அடையாளமும் என்மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பாரம் காரணமாக நசுக்கப்பட்டு உள்ளன. நான் எந்த குற்றமும் செய்யவில்லை இருந்தாலும் என்னை அவமானப்படுத்தவும், ஒடுக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

அந்த சமயங்களில் என் குரலை உயிர்ப்புடன் வைத்திருக்க, சிலர் இருந்திருக்கிறார்கள். தப்போது எனக்காகப் பலர் குரல் கொடுத்து வருவதைக் கேட்கும்போது, நீதிக்கான இந்தப் போராட்டத்தில் நான் தனியாக இல்லை என்பதை உணர முடிகிறது.

நீதியை நிலைநாட்டவும், தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்படவும், இனி யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும் நான் இந்தப் பயணத்தைத் தொடர்கிறேன். என்னுடன் உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றி.