நடிகர் சங்க தேர்தலை ஜூன் 23-ம் தேதியே நடத்தலாம் என்றும், ஆனால் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என்றும் சென்னை  உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 

2019-2022-ம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசர், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். சங்கரதாஸ் சுவாமிகள் அணி சார்பில் தலைவராக கே.பாக்யராஜ், பொதுச்செயலாளராக ஐசரி கணேஷ், பொருளாளராக பிரசாந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக நடிகர் சங்க தேர்தல் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடக்க இருப்பதாக அறிவித்தார்கள். தற்போது அந்த இடம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்றும் மாற்று இடத்தை பரிந்துரைக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் கூறியது. 

இதையடுத்து, தென்சென்னை பதிவாளர் நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இதற்கிடையே, நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்ததற்கு எதிராக விஷால் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்த பதிவாளரின் உத்தரவுக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட், ஏற்கனவே அறிவித்தப்படி தேர்தலை ஜூன் 23-ம் தேதி நடத்தலாம். ஆனால், வாக்குகளை எண்ணக்கூடாது என்று இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் நாசர் , நீதிமன்றத்தின் உத்தரவு தெளிவை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் நீதியை மதிக்கிறோம். திட்டமிட்டப்படி நாளை மறுநாள் தேர்தலை நடத்துவோம் என்றார். 

இதைத் தொடர்ந்து பாண்டவர் மற்றும் சுவாமி சங்கரதாஸ் அணிகள் மீண்டும் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கியுள்ளன.