கண்டுகொள்ளாமல் கைவிடப்பட்ட சின்னத்திரை... ஆயிரம் கிலோ அரிசியை வாரி வழங்கிய யோகிபாபு...!
இந்த செய்தியை கேள்விப்பட்ட நடிகர் யோகிபாபு, சின்னத்திரை தொழில்நுட்ப கலைஞர்கள் அசோசியேஷனுக்கு ஆயிரம் கிலோ அரிசி மூட்டைகளை இலவசமாக வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சமூக விலகல் மட்டுமே மக்களின் உயிரை காக்கும் ஒரே வழியாக உள்ளது. அதனால் தான் இன்றுடன் நிறைவடையவிருந்த ஊரடங்கை பாரத பிரதமர் மோடி அவர்கள் மே 3ம் தேதி வரை நீட்டித்துள்ளார். இருப்பினும் ஊரடங்கு உத்தரவால் திரைத்துறையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
இதனால் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் கொஞ்சம் உதவினால் பெப்சி தொழிலாளர்களுக்கு கஞ்சி சோறாவது கொடுக்கலாம் என அந்த அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து ரஜினி, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோர் லட்சங்களை வாரி வழங்கினார்.
இதேபோன்று துணை நடிகர்கள் போன்றவர்களுக்கு உதவ வேண்டுமென நடிகர் சங்கமும் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஊரடங்கால் வேலை இழந்து கஷ்டப்படும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நடிகர் யோகிபாபு 1250 கிலோ அரிசி வழங்கியுள்ளார். அந்த அரிசி பைகளை வாகனம் மூலம் தென்னிந்திய நடிகர்கள் சங்க உறுப்பினர்களின் வீடுகளுக்கே கொண்டு விநியோகித்துள்ளார். பசித்த வயிற்றிற்கு உணவளித்த யோகிபாபுவை பலரும் பாராட்டி வருகின்றனர். அதற்கு முன்னதாக 1,250 கிலோ அரிசியை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கினார்.
இதையும் படிங்க: கொரோனா அச்சத்தால் பின்வாங்கிய சுகாதார பணியாளர்கள்... தில்லாக களத்தில் இறங்கி கிருமி நாசினி தெளித்த ரோஜா....!
சினிமா தொழிலாளர்களுக்கு ஒருபுறம் உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன. மற்றொருபுறம் சின்னத்திரை தொழிலாளர்கள் எவ்வித நிவாரணமும் இன்றி கஷ்டப்பட்டு வருகின்றன. இந்த செய்தியை கேள்விப்பட்ட நடிகர் யோகிபாபு, சின்னத்திரை தொழில்நுட்ப கலைஞர்கள் அசோசியேஷனுக்கு ஆயிரம் கிலோ அரிசி மூட்டைகளை இலவசமாக வழங்கியுள்ளார். அடுத்தடுத்து தேடிச்சென்று உதவிகளை வாரி வழங்கும் யோகிபாபுவிற்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.