உடல்வலி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு மற்றும் லேசான காய்ச்சல் உள்ளதாகவும், இதிலிருந்து விரைவில் மீண்டு வர ஆவலோடு இருபதாகவும் நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால், திரையுலகம் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. பொங்கலுக்கு ரிலீசாவதாக இருந்த வலிமை, ராதே ஷ்யாம், ஆர்.ஆர்.ஆர் என அடுத்தடுத்து படங்களின் ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், சமீப காலமாக திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது.

கடந்த மாதம் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று மீண்டனர். கடந்த வாரம் நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதேபோல் நடிகை மீனாவும் அவரது குடும்பத்தினரும் கொரோனாவின் பிடியில் சிக்கினர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை திரிஷா, ஷெரின், நடிகர் சத்யராஜ் ஆகியோர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தனது டுவிட்டர் பதிவு மூலம் உறுதி செய்துள்ள அவர், மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது: “2022, பாசிடிவ் ரிசல்ட் உடன் ஆரம்பமாகி உள்ளது. ஆமாம் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொண்டு பாதுகாப்பாக இருங்கள். 

தீவிர உடல்வலி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு மற்றும் லேசான காய்ச்சல் உள்ளது. இதிலிருந்து விரைவில் மீண்டு வர ஆவலோடு இருக்கிறேன்” என கூறியுள்ளார். அவர் விரைவில் நலம் பெற வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். தற்போது நடிகர் விஷ்ணு விஷால் கைவசம் எப்.ஐ.ஆர், மோகன் தாஸ் போன்ற படங்கள் உள்ளன.