actor vishal press meet about raid in his office
தான் நேர்மையாக வரி செலுத்தி தொழில் செய்து வருவதாகவும், என்னை யாராவது பழிவாங்க நினைத்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். அண்மையில் இந்நிறுவனம் தயாரித்த துப்பறிவாளன் படம் வெளியானது.
இந்நிலையில், விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் மத்தியகலால் துறையின் கீழ் செயல்படும் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவினர் இன்று பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, நிறுவனத்தை சேர்ந்த விஷால் மற்றும் மேலாளர்கள் யாரும் அங்கு இல்லை. விஷால் தயாரிப்பு நிறுவனம் ஜி.எஸ்.டி வரியை முறையாக செலுத்தியுள்ளார்களா என்பது குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.ஆனால் ஜிஎஸ்டி அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், வருமான வரி தாக்கல் செய்தது தொடர்பாக தனது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாக செயல்பட்டதால் உங்களை மத்திய அரசு பழி வாங்குகிறதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், என்னை பழிவாங்க நினைத்தால் அதை எதிர்கொள்வேன் என தெரிவித்தார்.
திருநெல்வேலியில் கந்து வட்டி கொடுமை காரணமாக 4 பேர் தீக்குளித்ததில் 3 உயிரிழந்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷால் கேட்டுக் கொண்டார்.
