நான் ரொம்ப பயந்தவன் சார்! விஜய் சேதுபதி பேட்டி!
நான் ரொம்ப பயந்தவன் என்பதால், வெளிப்படையாக பேசமாட்டேன் என, நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
நான் ரொம்ப பயந்தவன் என்பதால், வெளிப்படையாக பேசமாட்டேன் என, நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் 96. 16, 36, 96 வயதுள்ள 3 தோற்றங்களில் விஜய் சேதுபதி காட்சியளிக்கும் இந்த படத்தில், த்ரிஷா, ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்-பில் நடைபெற்றது.
அப்போது மேடையில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ”இந்த படத்தின் கதையை இயக்குநர் பிரேம் சொன்னபோது, இந்த படம் எப்படி இருக்கும் என்ற பயம் உருவானது. தற்போது படம் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில், ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்ற பயம் மேலும் அதிகரித்துவிட்டது. செக்கச் செவந்த வானம் படம் வந்துவிட்டதால், தற்போது 96 படத்துக்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகி விட்டது. ஆனாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் நிச்சயம் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். ஆரம்பத்தில் படம் எப்படி இருக்கும் என ஏற்பட்ட பயம், தற்போது படம் மிகவும் நன்றாக இருக்கிறது என்ற பயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
பின்னர் விஜய் சேதுபதி, த்ரிஷா, இயக்குநர் சி.பிரேம்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய விஜய் சேதுபதி, ”ஒருநாள் இரவில் நடக்கும் கதைதான் 96 படம். என் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடக்கவில்லை. அதற்கு சர்வே என பெயர். எனக்கே இப்பத்தான் சர்வேன்னு ஒன்னு இருக்குன்னு தெரியும்” என்றார். ”நான் நிறைய படங்களில் நடிப்பதால், நிறைய பணம் வைத்திருப்பார் என்ற நினைப்பில் வரவு-செலவு கணக்கெல்லாம் ஒழுங்காக இருக்கிறதா என சோதிப்பதற்காக வந்தார்கள். அவ்வளவுதான்.
நான் எப்போதும் அட்வான்ஸ் வருமான வரி செலுத்துவிடுவேன். அதனால், என் ஆடிட்டர் ரிட்டன்ஸ் தாக்கல் செய்யவில்லை. திடீரென்று சென்று 3 வருடத்துக்கும் ரிட்டன்ஸ் தாக்கல் செய்ததால், ஏற்பட்ட குழப்பத்தால், அதை சர்வே செய்ய வருமான வரித்துறையினர் வந்திருந்தார்கள். என்னிடம் அவர்கள் சர்வே என்றுதான் சொன்னார்கள். செய்தி தவறாக போட்டால் நல்லதுதான். அப்போதுதான் வேகமாக பிரபலமாக முடியும்.
நம்மூர்ல இப்பல்லாம் கண்டத பேசுனாதான் பப்ளிசிட்டின்னு நினைக்கிறாங்க… பப்ளிக்ல கத்தி பேசிட்டு, அத நான் பேசல… என் அட்மின் பேசிட்டாரு, மிமிக்ரி பண்ணிட்டாங்கன்னு சொல்லலாம். அந்த மாதிரி என் வீடு போல ஒரு செட் போட்டு, வருமான வரி சோதனை நடந்திருக்கலாம். நான் வெளிப்படையா பேச மாட்டேன். நான் ரொம்ப பயந்தவன். அதனாலதான் நான் சொல்றேன். அது என் வீடு இல்ல… வேறு எங்கயோ செட் போட்டு, வருமான வரி சோதனை பண்ணிருக்காங்க…” என்று எச்.ராஜாவை கிண்டலடித்தார் விஜய் சேதுபதி.