உலகம் அழிஞ்சா நல்லா இருக்கும்... என்ன விஜய் ஆண்டனி இப்படி சொல்லிட்டாரு - எல்லாத்துக்கு காரணம் அதுதான்
சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வரும் விஜய் ஆண்டனி, தற்போது நிலவி வரும் கொரோனா லாக்டவுன் சூழலால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை பார்த்து விரக்தியில் டுவிட் ஒன்றை போட்டுள்ளார்.
'சுக்ரன்' என்ற படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இதையடுத்து வேட்டைக்காரன், வேலாயுதம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும் என பல்வேறு சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தார்.
இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'நான்' என்ற படத்தின் மூலம் விஜய் ஆண்டனி தமிழ் திரையுலகில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அந்த படம் ஹிட்டானதால் தொடர்ந்து வித்தியசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக இவர் நடித்த பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
தற்போது இவர் கைவசம் தமிழரசன், அக்னி நட்சத்திரம், கொலை, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் என ஏராளமான படங்கள் உள்ளன. இதில் பிச்சைக்காரன் 2 படம் மூலம் விஜய் ஆண்டனி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
இவ்வாறு பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வரும் விஜய் ஆண்டனி, தற்போது நிலவி வரும் கொரோனா லாக்டவுன் சூழலால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை பார்த்து விரக்தியில் டுவிட் ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும். வாழ்க வளமுடன்” என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவை ஆதரித்தும், எதிர்த்தும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.