நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி புற்றுநோய் சிகிச்சைக்குப் பின் காலமானார். 'பரியேறும் பெருமாள்', 'காலா' உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தார்.

பிரபல நகைச்சுவை நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி சனிக்கிழமை காலமானார். புற்றுநோய் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி, 'பரியேறும் பெருமாள்', 'காலா', 'பிசாசு', 'ரஜினி முருகன்', 'ஜெய் பீம்', 'வானம் கொட்டட்டும்' உள்ளிட்ட பல படங்களில் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். பரமன் திரைப்படத்தில் இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சுமார் 30 ஆண்டுகளாகத் திரையுலகில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியதால் இவர் சூப்பர் குட் சுப்பிரமணி என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் அவரது நோய் முற்றிய நிலையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தனர். கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்த அவரின் குடும்பத்தினர் சமீபத்தில் உதவி கோரியிருந்தனர்.

இதனையடுத்து, நடிகர் கார்த்தி அவரது குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார். மேலும், ரஜினிகாந்த், சத்யராஜ், சிம்பு, சூர்யா, கார்த்தி, சாந்தனு, சமுத்திரக்கனி, சிவகார்த்திகேயன், விஜய் முத்து, பூச்சி முருகன், சின்னத்திரை நடிகர் பாலா, இயக்குநர்கள் ஜவஹர் மித்ரன், வீர அன்பரசு ஆகியோருடன் நடிகர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் பலரும் அவருக்குப் பண உதவி செய்தனர்.

இந்நிலையில், சூப்பர் குட் சுப்பிரமணி சற்று நேரத்திற்கு முன்பு காலமானார். அவரது மறைவுக்குப் பல திரை பிரபலங்களும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு மேற்கு மாம்பலத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நாளை சென்னையில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.