“10 பேர் என்னை அடிக்க வந்தாங்க”... நடிகர் ரியாஸ்கானின் பரபரப்பு வீடியோ...!
கொரோனா விழிப்புணர்வு குறித்தும் எடுத்துரைக்க முயன்றவரை தான் அந்த இளைஞர்கள் தாக்கியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், இன்றளவும் ஒரு சிலர் வெளியில் தேவை இல்லாமல் நடமாடுவதை பார்க்க முடிகிறது. இதன் காரணமாக இவர்கள் மூலமாகவே மிக எளிதாக மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என கருதப்படுகிறது.
அப்படி தனது வீட்டின் அருகே நின்றிருந்த இளைஞர்களை கேள்வி கேட்ட நடிகர் ரியாஸ்கான் மீது தாக்குதல் நடந்தப்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையை அடுத்த நீலாங்கரை என்ற பகுதியில் உள்ள பனையூரில் வசித்து வரும் நடிகர் ரியாஸ்கான், அங்கு கூட்டமாக நின்று கொண்டிருந்த இளைஞர்களை கலைந்து செல்ல கூறியுள்ளார். கொரோனா விழிப்புணர்வு குறித்தும் எடுத்துரைக்க முயன்றவரை தான் அந்த இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து நடிகர் ரியாஸ் கான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் வீட்டு பால்கனியில் நின்று காபி குடித்துக்கொண்டிருந்தேன். அப்போது என் வீட்டின் அருகே 10 பேர் கும்பலாக நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போய் தம்பி, ஏன் இங்க நிற்கிறீர்கள் என்று கேட்டேன். அவர்கள் காற்று வாங்க நின்றிருப்பதாக கூறினார். இது தப்பு கொரோனா ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில், இப்படி வெளியே வரக்கூடாது. உங்க வீட்டு மொட்டை மாடியில் போய் காற்று வாங்குங்கள். கொரோனா வைரஸ் பிரச்சனை குறித்தும் விளக்கினேன்”.
அப்போது, ”நாங்கள் ரோட்டில் தான் நிற்கிறோம்.உங்க வீட்டில் நிற்கவில்லை என்று கூறி தகராறு செய்தனர். நடிகர் ரியாஸ் கான் என்றால் அதை படத்தில் வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு தேவையில்லாமல் அறிவுரை கூற வேண்டாம். எங்களுக்கு கொரோனா வைரஸ் வியாதி வராது. என் குடும்பம் மற்றும் சுற்றி இருப்பவர்களை காப்பாற்றவே இதை கூறுகிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஒருவன் என்னை தலை மீது தாக்க முயன்றான். அந்த அடி எனது தோள்பட்டை மீது விழுந்தது. தகவலறிந்து வந்த போலீசார் உடனடியாக அனைவரையும் கைது செய்தனர்”.
”கொரோனா வைரஸ் நோய் எங்களுக்கு வராதுன்னு ஏன் சொல்றாங்க. ஏன் இப்படி பொறுப்பில்லாமல் இருக்காங்க. அவங்களுக்கும் குடும்பம், குழந்தைங்க எல்லாம் இருக்கு. நாம் எல்லாருமே சேர்ந்து ஒத்துழைத்தால் கொரோனா வைரஸை ஒழிக்க முடியும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.