தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் (Rajinikanth), இந்த தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள வார்டுகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15,158 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன. மாநிலம் முழுவதும் மொத்தமாக 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.

வாக்குப்பதிவு மையங்களில் இன்று நடைபெறும் தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் மின்னணு இயந்திரம் மூலமே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதில் பிரபலங்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் காலை 7 மணிக்கு நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதேபோல் நடிகைகள் குஷ்பு, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையாற்றினர்.

இந்நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த், இந்த தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனிப்பட்ட காரணங்களால் ரஜினி இந்த தேர்தலில் வாக்களிக்கப்போவதில்லை என கூறப்படுகிறது. நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த மாதம் தனது கணவர் தனுஷை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்தார். மகளின் இந்த முடிவால் நடிகர் ரஜினிகாந்த் கடும் மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.
