பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது... உச்சகட்ட எதிர்பார்ப்பில் பிரபாஸ் ரசிகர்கள்...!
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக படத்தின் இயக்குனர் ஓம் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் 2022 ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபாஸ், பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். அடுத்து மீண்டும் இந்தியாவை திரும்பி பார்க்க வைக்க திட்டம் போட்டுள்ள பிரபாஸ், தன்ஹாஜி பட இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடிக்கிறார். ராமயணத்தின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்க உள்ளார்.
சைஃப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் ஹீரோயின் அதாவது சீதை கேரக்டரில் முதலில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
3டி தொழில்நுட்பத்தில் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாக உள்ள இந்த திரைப்படம், தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2021-ல் தொடங்கி 2022-ல் படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த படத்திற்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை மேற்கொள்ள அவதார் மற்றும் ஸ்டார் வார்ஸ் போன்ற பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு பணியாற்றிய WETA நிறுவனத்தின் VFX தொழில்நுட்ப கலைஞர்களை களமிறக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.