வாக்குறுதி மீறப்பட்டதால் பொறுப்பில் இருந்து விலகினேன்... பொன்வண்ணன் விளக்கம் ..!
கடந்த 2015 ஆம் ஆண்டு, நடிகர் சங்க பொறுப்பில் இருந்த நடிகர் சரத்குமார், ராதாரவி ஆகிய உறுப்பினர்கள் நடிகர் சங்க பணத்தை கையாடல் செய்ததாகக் கூறி, நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணி என்ற பெயருடன் விஷால், கார்த்தி, பொன்வண்ணன் ஆகிய உறுப்பினர்கள் களமிறங்கினர்.
மிகப் பெரிய சர்ச்சைகளுக்கு இடையே நடைபெற்ற இந்தத் தேர்தலில், நடிகர் நாசர் தலைமையில் களமிறங்கிய விஷால் அணியினர் வெற்றி பெற்றனர். மேலும் இவர்கள் தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகளையும், மெல்ல மெல்ல நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் திடீர் என, நடிகர் சங்கத் துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக நடிகர் பொன்வண்ணன் ஒரு மாதத்திற்கு முன்பே நடிகர் சங்க நிர்வாகிகளிடம் கடிதம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தத் தகவலை கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அதிகார பூர்வமாக அறிவித்தார் பொன்வண்ணன்.
இதுவரை, இந்தப் பொறுப்பில் இருந்து விலகக் காரணம், சொந்தப் பிரச்சனை என கூறி வந்த இவர், முதல் முறையாக இப்படி ஒரு முடிவை எடுக்க என்ன காரணம்? என விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து நடிகர் பொன்வண்ணன் கூறுகையில் அரசியல் சார்பற்று செயல்படுவதே நடிகர் சங்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதாக வெளியான செய்தி எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
மேலும் நடிகர் சங்கத்தில் அவர் பொறுப்பேற்ற போது கொடுக்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டதால் நடிகர் சங்க துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து நான் விலகினேன்.ஆனால், பின்னர் விஷால் வருத்தம் தெரிவித்ததை அடுத்தும், சங்கத்தின் நலன் கருதியும் என் ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றுக் கொண்டேன். இருப்பினும் நான் என் கொள்கையில் இருந்து மாறப் போவதில்லை.
அடுத்து மலேசியாவில் நடைபெறவுள்ள கலை நிகழ்ச்சிகளில் சங்கத்தின் சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பணிகளில் கவனம் செலுத்துவோம். அனைவரும் ஒன்றிணைந்து இதனை வெற்றி பெறச் செய்வோம் என்று கூறினார் பொன்வண்ணன்.