கோலிவுட்டில் எந்த நடிகருக்கும் கிடைக்காத ஒரு அங்கீகாரம்... எனக்கு கிடைச்சிருக்கு- கெத்தாக அறிவித்த பார்த்திபன்
சினிமாவில் பல்வேறு புதுவிதமான முயற்சிகளை மேற்கொள்ளும் பார்த்திபனுக்கு (parthiban) தற்போது ஐக்கிய அரபு அமீரக அரசு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் வெற்றிகண்டவர் பார்த்திபன் (parthiban). புதுமை விரும்பியான இவர் தனது படங்கள் மூலமாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இவர் மட்டுமே இயக்கி, தயாரித்து, நடித்த "ஒத்த செருப்பு சைஸ் 7" திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஒரே ஒரு ஆள் மட்டுமே நடித்த இந்திய திரைப்படம் என்ற பெருமை இதற்கு உண்டு.
இந்த திரைப்படம், ஆஸ்கர் விருதுக்கு சென்று வந்தது, அதே போல்... சிறந்த படமாக தேசிய விருதையும் பெற்றது. தற்போது இயக்குனர் பார்த்திபன், இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார். அபிஷேக் பச்சன் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதுதவிர இரவின் நிழல் என்கிற படத்தையும் இயக்கி வருகிறார் பார்த்திபன். இப்படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு சினிமாவில் பல்வேறு புதுவிதமான முயற்சிகளை மேற்கொள்ளும் பார்த்திபனுக்கு தற்போது ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி உள்ளது. கவுரவமிக்க இந்த கோல்டன் விசாவை பெறும் முதல் தமிழ் நடிகர் பார்த்திபன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
யுஏஇ வழங்கும் கோல்டன் விசா (Golden Visa) என்பது அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்துவிடாது. தங்களுடைய துறையில், சிறந்து விளங்குபவர்களுக்கு மட்டுமே இந்த கௌரவத்தை கொடுத்து வருகிறது ஐக்கிய அரபு அமீரகம். அந்த வகையில் தற்போது, பல்வேறு பாலிவுட் படங்களிலும், சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருபவர்கள், மற்றும் அந்நாட்டில் முதலீடு செய்யும் தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள் போன்றோருக்கு இந்த விசா வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விசாவுக்கு பல சிறப்புகள் உள்ளன. கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கவும், எவ்வித தடையும் இன்றி வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களும் ஐக்கிய சிட்டிசன்களுக்கு நிகராகவே கருதப்படுவார்கள். இந்த விசா ஒவ்வொருவருக்கும் 5 அல்லது 10 ஆண்டுகள் புதுப்பிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.