Mammootty : திரையுலகினரை விடாது கருப்பாய் துரத்தும் கொரோனா.... மலையாள நடிகர் மம்முட்டிக்கு தொற்று உறுதி
மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகள், சமீபகாலமாக கொரோனாவின் பிடியில் சிக்கி வருகின்றனர். கடந்த மாதம் கமல்ஹாசன், விக்ரம் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பெற்று மீண்டனர். இதையடுத்து புத்தாண்டு தொடங்கியது முதலே, பலரும் கொரோனாவின் வலையில் சிக்கி வந்தனர்.
நடிகைகள் திரிஷா, குஷ்பு, மீனா, ஷோபனா, கீர்த்தி சுரேஷ், ரைசா ஆகியோரும், நடிகர்கள் அருண்விஜய், சத்யராஜ், மகேஷ் பாபு ஆகியோரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்கள். இவர்களில் சிலர் மருத்துவமனையிலும், சிலர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று குணமடைந்தார்கள்.
இந்நிலையில், தற்போது பிரபல மலையாள நடிகர் மம்முட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “அனைத்து விதமான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும் நேற்று எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. லேசான காய்ச்சல் மட்டுமே உள்ளது மற்றபடி நலமாக உள்ளேன்.
மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, தற்போது நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளேன். அனைவரும் மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்” என அவர் அறிவுறுத்தி உள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.