எளியவர்கள் மீது சுமத்தப்பட்ட இழிவைப் போக்க இறுதிவரை போராடியவர் பெரியார் - கமல்ஹாசன் புகழாரம்
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், பெரியாரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என கடந்தாண்டு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இந்த ஆண்டும் பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாகவே கொண்டாடப்படுகிறது.
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அவருடன் அமைச்சர்களும் உடன் இருந்தனர். அதுமட்டுமின்றி பெரியாரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அரசியல் தலைவர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... தந்தை பெரியாரின் 144 -வது பிறந்த நாள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!
அந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், பெரியார் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “சமநீதி, சிந்தனை, சீர்திருத்தம், சுயமரியாதை, செயலூக்கம் ஆகிய சொற்களுக்கு அருஞ்சொற்பொருளாக விளங்கியது பெரியார் என்ற பெயர். இறுதிவரைக்கும் எளியவர்கள் மீது சுமத்தப்பட்ட இழிவைப் போக்கப் போராடிய ஈ.வெ.ராமசாமிப் பெரியாரை எண்ணி வணங்குகிறேன்” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... காசி பயணம் முதல் தீண்டாமை எதிர்ப்பு வரை.. பகுத்தறிவு பகலவன் பெரியார் வாழ்க்கை வரலாறு குறிப்புகள்..!