திரையரங்கில் விளக்கை அணைத்துவிட்டால் அங்கு சாதி காணாமல் போய்விடும் என்று கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். 

விஷால் வெங்கட் இயக்கத்தில் , அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள 'சில நேரங்களில் சில மனிதர்கள் ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில், படத்தின் தயாரிப்பாளர்கள் அஜ்மல் கான், ரீயா மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் கே.எஸ். ரவிகுமார், வெற்றிமாறன், பிரபு சாலமன், நடிகை ரித்விகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ‘சினிமா ரசனை என்பது நெருப்பு போல பற்றிக் கொள்வது , ஆர்வம் , திறமை இல்லாமல் சினிமாவில் சாதிக்க முடியாது. சினிமாவுக்கு சாதி , மதம் கிடையாது. சிலர் இந்த கருத்தை மறுப்பார்கள் என்றாலும் எனக்கு கவலை இல்லை. திரையரங்கில் விளக்கை அணைத்துவிட்டால் அங்கு சாதி காணாமல் போய்விடும். எனவேதான், சினிமாவில் எதை சொன்னாலும் நாங்கள் எச்சரிக்கையோடு சொல்கிறோம்.வாழ்க்கை நமக்கு எப்போதும் கற்றுத் தரவே முயற்சிக்கிறது. குப்பங்களிலும் மழைநீரிலும் தொற்றாத கொரோனா, விமானநிலையத்தில் தொற்றியது.


நாம்தான் கர்வத்தில் பலவற்றை உதாசீனப்படுத்துகிறோம். எங்களைப் பார்த்து புதியவர்கள் வியந்து விட வேண்டாம், எங்களின் தவறுகளை கண்டறிந்து அதை நீங்கள் செய்யாமல் இருங்கள். இசையமைப்பாளர் ரதன் தனக்கு தாய் சிறுவயதில் எனது படத்தை காட்டி சோறு ஊட்டியாதாக கூறினார். நிலாவை காட்டி சோறு ஊட்டுவார்கள், அவருக்கு ஒரு ஜந்து போல நான் பயன்பட்டுள்ளேன். படத்தின் கதையுடன் பாடலை கலப்பது எளிதானதல்ல. கே.பாலசந்தர் போன்றவர்களிடம் அதை கற்க வேண்டும்’ என்று கூறினார்.