தன் மகளை தன் மனைவியிடம் இருந்து மீட்டு தரும்படி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் திரைப்பட நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி புகார் தெரிவித்துள்ளார்.

குடிபோதையில் பிரச்சனை செய்யும் தாடி பாலாஜி

தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் தாடி பாலாஜி, இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு போர்ஷிகா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்களுக்கு இடையே பல முறை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கொடுத்து கொண்டே உள்ளனர். இந்தநிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு பேரும் ஒன்றாக கலந்து கொண்டனர். அப்போது இருவருக்கும் இடையே பிரச்சனை தீர்ந்து குழந்தைக்காக ஒற்றுமையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தததும் மீண்டும் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. பாலாஜி மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து கலாட்டா செய்கிறார் என்றும் குடிபோதையில் வந்து வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைப்பதாகவும், செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார் என்றும் நித்யா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

தாடி பாலாஜி ஆடியோ வெளியிடுவேன்

இருவருக்கும் இடையே பிரச்சனை தொடர்ந்து வந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்சிக்கு சென்ற தாடி பாலாஜி, தனது மனைவி நித்யா பற்றி கருத்து தெரிவித்துள்ளார், இதற்கு பதில் அளிக்கும் வகையில் சமூகவலை தளத்தில் புகார் தெரிவித்திருந்தார் நித்யா, அதில் தன்னை பற்றி தேவையில்லாத கருத்துகளை தாடி பாலாஜி தெரிவிப்பதாக குற்றம்சாட்டினார். இனிமேலும் தன்னை பற்றி தவறாக பேசினால், தாடி பாலாஜி தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திட்டிய ஆடியோவை வெளியிடுவேன் என எச்சரித்திருந்தார். 

மகளை மீட்டு தர வேண்டும்

இந்தநிலையில் தனது மகளை, மனைவி பிடியிலிருந்து மீட்டுத் தரும்படியும் மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நடிகர் தாடி பாலாஜி தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நானும் என் மனைவியும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்ததாகவும், மகள் போஷிகா மனைவி பராமரிப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார் சமீபகாலமாக மகளை பள்ளிக்கு சரியாக போக விடாமலும் தவறான வழிகாட்டுதலால் தன் மகளை மிரட்டி தன்னிடம் பணம் பறிக்கும் முயற்சியில் மனைவி நித்யா ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் மகளின் எதிர்காலத்தை கெடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் என்னை பற்றி தவறாக பேச வைப்பதாகவும் தெரிவித்தார். எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாடி பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.