மனைவியை கொலை செய்ய முயன்ற விவகாரம்: போலீசில் ஆஜரானார் தாடி பாலாஜி!
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் காமெடி நடிகராகக் கலக்கி வருபவர் நடிகர் தாடி பாலாஜி. கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது இரண்டாவது மனைவி நித்தியா கணவர் தாடி பாலாஜி தன்னை அடித்துக் கொலை செய்ய முயற்சி செய்ததாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மேலும் தாடி பாலாஜி அறையில் பூட்டி வைத்துக் கொளுத்த முயன்றதாகவும் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அதில் பெற்ற மகள் முன்னிலையில் தாடி பாலாஜி அசிங்கமாகப் பேசுவது போலவும் அருவருக்கத் தக்க செய்கைகள் செய்வது போலவும் இருந்தது.
இதைத் தொடர்ந்து தாடி பாலாஜியும், தன்னுடைய மனைவிக்கும் அவருடைய ஆண் நண்பர் ஒருவருக்கும் தகாத உறவு உள்ளதாகவும், அது தனக்கு தெரிய வரவே இது போன்ற பிரச்சனைகள் உருவெடுத்துள்ளது என்றும் கூறினார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில், தாடி பாலாஜியின் மனைவி நித்தியா செய்தியாளர்களை சந்தித்து, பாலாஜி கூறி வருவது முழுக்க முழுக்க பொய் என்றும் கூறி விளக்கம் கொடுத்தார்.
தற்போது நித்தியாவை கொலை செய்ய முயற்சி செய்ததாக அவர் மீது நித்தியா கூறியுள்ள குற்றச்சாட்டுக்காக இருதரப்பினரையும் அழைத்து மாதவரம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நித்தியா தன்னுடைய கணவருடன் வாழ்வதற்கு துளிகூட விருப்பம் இல்லை என்று கூறி தன்னுடைய குழந்தையை கொடுக்க மறுத்ததாகத் தெரிகிறது.
ஒரு கட்டத்தில் இருவருக்குள் வாக்குவாதம் முற்றியதாகவும், அதனை போலீசார் தடுத்து சமரசம் செய்து இருவரையும் தனித்தனியே அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.