நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழா.. பங்கேற்காத மூத்த நட்சத்திரங்கள்...
ரூ.26 கோடியில் கட்டப்படும் நடிகர் சங்கத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று நடந்தது. இதில், மூத்த நட்சத்திரங்கள் பங்கேற்கவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக சரத்குமார், ராதாரவி, நெப்போலியன் ஆகியோரின் தலைமையில் நடிகர் சங்கம் இயங்கி வந்தது. இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையில் விஷால், கார்த்தி உள்ளிட்டோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
அப்போது, நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும். அதில், திருமண மண்டபமும் கட்டி முடித்து வாடகைக்கு விடப்படும். அதன் மூலம் வரும் வருவாயை, நலிந்த நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்படும் என நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் கூறினார்.
இதைதொடர்ந்து நடிகர் சங்கம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது. இதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி, நன்கொடைகள் பெறப்பட்டன.
இந்நிலையில், இன்று நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் நாசர், விஷால், கர்ணாஸ், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆனால், மூத்த நட்சத்திரங்களான ரஜினி, கமல், அஜீத், விஜய் ஆகியோர் இதுவரை விழாவுக்க வந்து சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.