ஹிப்ஹாப் தமிழா ஆதி திரைத்துறைக்கு வரும் முன்னரே தன்னுடைய பல்வேறு பாடல்களை ரேடியோ மற்றும் யூ-டியூப் மூலமாக வைரலாக்கி வந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. ‘ஹிப்ஹாப் தமிழா’ என்ற தமிழ் மெல்லிசை குழு மூலமாக ஆரம்பத்தில் ஆல்பம் பாடல்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து, இசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக மாறினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதனைத் தொடர்ந்து நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக மீசைய முறுக்கு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். சுந்தர் சி இயக்கிய அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தொடர்ந்து நான் சிரித்தால், நட்பே துணை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது சிவகுமாரின் சபதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

ஹிப்ஹாப் தமிழா ஆதி திரைத்துறைக்கு வரும் முன்னரே தன்னுடைய பல்வேறு பாடல்களை ரேடியோ மற்றும் யூ-டியூப் மூலமாக வைரலாக்கி வந்துள்ளார். ஆதியின் யூ-டியூப் பக்கத்தை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்பற்றி வந்த நிலையில், திடீரென அப்பக்கம் முடக்கப்பட்டுள்ளது. ஹேக்கர்களால் ஹிப்ஹாப் ஆதியின் யூ-டியூப் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆதியின் ஆல்பம் பாடல்கள் அழிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு முன்னதாக பிரபல நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக்கர்களால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.