கொரோனாவிலிருந்து குணமடைந்தார் நடிகர் ராமராஜன்... முதல்வர், துணை முதல்வருக்கு மனமார்ந்த நன்றி...!
அங்கு கடந்த 8 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸின் கோர தாண்டவம் திரைத்துறை பிரபலங்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. அமிதாப் பச்சனில் ஆரம்பித்து எஸ்.பி.பி.பாலசுப்ரமணியம் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சின்னத்திரை, வெள்ளித்திரை என எவ்வித பாகுபாடும் இல்லாமல் திரையுலகினரை கொரோனா பாதித்து வருகிறது. அரண்மனை கிளி சீரியலில் நடித்த நடிகை உட்பட 22 பேருக்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது ஒட்டுமொத்த திரையுலகமும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையை எண்ணி கவலையில் ஆழ்த்துள்ள இந்த நேரத்தில், ஒரு சிறிய மகிழ்ச்சி தரும் செய்தி கிடைத்துள்ளது. அதாவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் ராமராஜன் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தார் என்பது தான் அது.
கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், எங்க ஊரு மாப்பிள்ளை என பல வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றவர் ராமராஜன். ஹீரோ என்றாலே மடிப்பு கலையாத வேட்டி, சட்டையில் வலம் வர வேண்டும் என்ற வரலாற்றை மாற்றி, அரை டவுசரில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இழுந்தவர். அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
.ராமராஜனுக்கு கடந்த 17ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 8 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "சில நாட்களுக்கு முன்பு எனக்கு கொரோனாவின் தாக்கம் இருக்குமோ என்ற ஐயப்பாடு இருந்ததால் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு மருத்துவர்களும் செவிலியர்களும் மட்டுமல்ல அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரிவதைக் கண்டேன். எனக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர்.
உயர்தர சிகிச்சை அனைவருக்கும் அங்குக் கிடைக்கிறது. இதற்காக முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கும், துணை முதல்வர் அண்ணன் ஒ.பி.எஸ் அவர்களுக்கும், சுகாதாரத் துறை அமைச்சர் சகோதரர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிங்க: ஆபத்தான நிலையில் எஸ்.பி.பி... மகனுடன் அவசர ஆலோசனையில் மருத்துவர்கள்... தற்போதைய நிலவரம் என்ன??
எனக்குச் சிகிச்சை முடிந்து நேற்று வீட்டிற்கு வந்து விட்டேன். இந்த இடைபட்ட நாட்களில் எனக்காகப் பிரார்த்தனை செய்து என் மீது அக்கறை கொண்டு தொலைபேசியிலும், நேரிலும் நலம் விசாரித்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சக நடிகர் நடிகைகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும், நண்பர்களுக்கும் . உற்றார் உறவினர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடகத் துறை நண்பர்களுக்கும், மக்கள் தொடர்பாளர்கள் மற்றும் என் ரசிக பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.