பொதுக்குழுவை புறக்கணித்த முன்னணி நடிகர் நடிகைகள்!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64 வது பொதுக்குழுக் கூட்டம் நேற்று மிகவும் பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இதில் வருத்தப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த பொதுக் குழுக் கூட்டத்தில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை.
நடிகர் சூர்யா மட்டுமே முன்னணி நடிகர்களில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித், ஜெயம் ரவி, ஜீவா, விஷ்ணு விஷால், மற்றும் வளர்த்து வரும் நடிகர்கள் என யாரும் கலந்து கொள்ளாதது நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
மேலும் முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் இருக்கும் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை. ஆனால் 80-90 களில் கதாநாயகியாக நடித்த நடிகைகள் பலர் இந்தப் பொதுக்குழுவில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து நடிகர்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பேசுகையில், மற்ற மொழி நடிகர்களுக்கு பொதுக்குழு நடத்தும் போது அனைத்து நடிகர் நடிகைகளும் மதிப்பு கொடுத்து கலந்து கொள்கின்றனர் ஆனால் தமிழ் திரையுலகில் மட்டும் அப்படி இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என பேசிக்கொண்டனர். மேலும் சரியான காரணமின்றி பொதுக் குழுவை புறக்கணித்தவர்கள் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் பொதுக்குழுவில் கலந்து கொள்ள ஏதுவாக ஒரு நாள் திரையுலகைச் சேர்ந்த அனைத்து துறைக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.