தல அஜித், நடிப்பதையும் தாண்டி பல்வேறு விளையாட்டு துறையிலும் கவனம் செலுத்தி வருபவர். அந்த வகையில், கடந்த சில மாதங்களாக இவர் துப்பாக்கி சுடுதல் பயிற்சி எடுத்து வந்த நிலையில், சமீபத்தில் தமிழ்நாடு அளவிலான 45-வது துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, அடுத்த கட்டத்திற்கு தேர்வானார். இந்நிலையில் தல அஜித்துக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

'தல' அஜித்தை பொறுத்தவரை, எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் அறிமுகமாகி, பல்வேறு தடைகளை தாண்டி, முன்னணி நடிகராக உயர்ந்தவர். இதன் காரணமாகவே இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திரையுலகிலும், ரசிகர்களிடமும் சிறந்த நடிகர், நல்ல மனிதர் என பெயர் எடுத்துள்ள இவர், விளையாட்டு துறையிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.

குறிப்பாக பைக் ரேஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதை தொடர்ந்து கார் ரேஸ், போட்டோ கிராபி, ஏரோ மாடலிங், போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இதேபோல் சமீப காலமாக, 'துப்பாக்கி' சுடுதலில் ஆர்வம் காட்டி வந்தார்.

இந்நிலையில், கடந்த ஓரிரு மாதத்திற்கு முன், கோயம்பத்தூரில் நடைபெற்று வரும் தமிழ்நாடு அளவிலான 45-வது துப்பாக்கிச் சூடு போட்டியில், சென்னை ரைபிள் கிளப் உறுப்பினரான நடிகர் அஜித் கலந்துக் கொண்டு விளையாடித்தார். இந்த போட்டியில் அஜித் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். எனவே வரும் டிசம்பர் மாதம் மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார்.

இந்நிலையில் கோவையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு போட்டியில் கலந்து கொண்ட அஜித்துக்கு சென்னை ரைபிள் கிளப் சான்றிதழ் கொடுத்து கெளரவித்துள்ளது. தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழ் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

மேலும், கஷ்டப்பட்டு படித்து ஒரு வேலையை செய்தால் தான் வெற்றி கிடைக்கும் என பலர் எதிர்பார்க்கும் நிலையில், மனதிற்கு பிடித்ததை, முழுமனதோடு செய்தாலே பாஸ்... பாஸ்... என ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார் தல பாஸ்.