"மெர்சல்" வசூல் ரூ.200 கோடியா? வசூல் என்ன என்பது தயாரிப்பாளருக்கே தெரியாது..! உண்மையை உடைத்த அபிராமி ராமநாதன்..!
மெர்சல் திரைப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படும் தொகை எல்லாம் பொய் என திரையரங்க உரிமையாளரும் மெர்சல் படத்தின் சென்னை விநியோகஸ்தருமான அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
மெர்சல் திரைப்படத்தின் வசூல், 200 கோடியை நெருங்கிவிட்டதாக தகவல்கள் பரவிவருகின்றன. இந்நிலையில், அப்படத்தின் சென்னை விநியோகஸ்தரும் திரையரங்க உரிமையாளருமான அபிராமி ராமநாதன், இணையதள செய்திநிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நாங்கள் 1976-ல் இருந்து இந்தத் துறையில் உள்ளோம். முன்பு, பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு 20% வரை டிக்கெட்டுகள் ஒதுக்கிவிடுவோம்.
எம்ஜிஆர் படத்துக்கு நூறு ரூபாய் டிக்கெட் விற்கிறார்கள் என மக்கள் வியந்தால் எனக்கு அந்த இடத்தில் இலவசமாக விளம்பரம் கிடைக்கிறது.
அதனாலேயே இன்று ரூ. 150 கோடி, ரூ. 200 கோடி வசூலாகிறது என்று சொல்கிறார்கள். இது சிதம்பர ரகசியம். யாராலும் கண்டுபிடிக்கமுடியாது. சென்னை மாநகரில் இந்தப் படத்துக்கு எவ்வளவு வசூல் கிடைத்தது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். படத்தின் தயாரிப்பாளருக்குக்கூட தெரியாது. அவரிடம் இதுவரை வசூல் குறித்து எதுவும் சொல்லவில்லை. படம் ஓடி முடிந்தபிறகுதான் வசூல் விவரங்கள் தயாரிப்பாளருக்கே கொடுக்கப்படும். அதேபோலத்தான் மற்ற மாவட்டங்களிலும் எவ்வளவு வசூலானது என்பது குறித்து தயாரிப்பாளருக்கு சொல்லப்படமாட்டாது.
அப்படி இருக்கையில், 150 கோடி வசூல், 200 கோடி வசூல் என எப்படி சொல்கிறார்கள்? இப்படி சொல்லப்படுவதை யாராலும் மறுக்கவும் முடியாது. இது ஒருவகையான இலவச விளம்பரம். மற்றபடி இதில் உண்மை கிடையாது என அப்பட்டமாக உண்மையை போட்டுடைத்து விட்டார் அபிராமி ராமநாதன்.