பஞ்சத்தில் முளைத்த கற்பக விருட்சம் அப்துல் கலாம் – வைரமுத்து புகழாரம்…
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அப்துல் கலாம் புகழை பறைசாற்றும் விதமாக ‘கலாம் சலாம்’ என்ற கலாம் கீதம் உருவாக்கப்பட்டுள்ளது.
வைரமுத்துவின் வரிகளில் ஜிப்ரான் இசை அமைத்துள்ள இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இயக்குனர் வசந்த் இயக்கி உள்ளார்.
இப்பாடல் வெளியீட்டு நிகழ்வில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் இப்பாடலின் சிடியை வெளியிட்டார். அதனை வைரமுத்து பெற்றுக் கொண்டார்.
பின்னர் வைரமுத்து பேசியது:
“அப்துல் கலாம் காலம் கடந்து, மொழி கடந்து, இனம் கடந்து பல நூற்றாண்டுகளுக்கு நினைவு கூறப்பட வேண்டியவர். அவரைப் பற்றிய இப்பாடல் நம்மை நாமே பெருமைப்படுத்திக் கொள்வதாகும்.
கலாம் இறந்தபோது 21-ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் அப்துல் கலாம் என்று ஆந்திர அரசு தீர்மானம் நிறைவேற்றியது.
எல்லா துறைகளிலும் சிறந்த மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் தண்ணீர், உணவு பஞ்சங்களை விட நல்ல தலைவர்களுக்குத்தான் பஞ்சம் அதிகமாக உள்ளது.
இந்த பஞ்சத்தில் முளைத்த கற்பக விருட்சம் அப்துல் கலாம்.” என்று புகழாரம் சூட்டினார்.