சாதி வெறியை பொசுக்கிய 3 ரோசஸ் விளம்பரம்... பா.ரஞ்சித் இயக்கியதா..?
அப்பா, அவர் வேற சாதிதான்பா ஆனால் ஒரேஒரு தடவை சந்திக்கலாம்ல எனக் கேட்கிறார்.
பொங்கல் பண்டிகையையொட்டி 3 ரோசஸ் டீ நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய விளம்பரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக திரைப்படங்களில் சாதியை மையமாக வைத்து திரைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.
இந்நிலையில் விளம்பரத்தையும் சாதியை மையப்படுத்தி எடுத்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. 3 ரோசஸ் வெளியிட்டுள்ள விளமபரத்தில், அப்பா பெண்ணுக்கு செய்தித்தாளில் மணமகன் தேடிக் கொண்டிருக்கிறார். அதைப்பார்த்த மகள் அப்பா, அவர் வேற சாதிதான்பா ஆனால் ஒரேஒரு தடவை சந்திக்கலாம்ல எனக் கேட்கிறார். உடனே கோபப்பட்ட அப்பா செய்திதாளை காட்டி, இதோபார் நம்ம ஜாதியில எத்தனை நல்ல பசங்க இருக்காங்கனு.. என கூற மகள் சோகமாகிறாள். அடுத்து அவர் வீட்டு வேலைக்காரர் டீ போட்டு எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்.
அதனை எடுத்து அப்பாவிடம் கொடுக்கும் மகள், ‘’அப்பா டீல சுகர் கரெக்டா இருக்கா? ஏலக்காய் டேஸ்ட் வருதா? எனக் கேட்கிறார். உடனே அப்பா, ‘’ அட நீ ஒருத்தி குடிச்சு பார்த்தால் தானே தெரியும்... என்கிறார் உடனே மகள், ‘’அதான்பா அவரை மீட்பண்ணினால் தானே தெரியும் அவர் எப்படினு...’எனக்கூற சிந்தித்து மனம் மாறுகிறார் அப்பா.
இந்த போகியன்று பழைய எண்ணங்களை எரிப்போம் என பின்னணி குரல் ஒலிக்க, வரன் தேடிய செய்தித்தாள் எரிக்கப்படுகிறது. ’சரி அவரை எப்போது மீட் பண்ணலாம் என அப்பா’ கேட்க மகள் சந்தோசப்படுவதோடு முடிகிறது விளம்பரம்.
இந்த விளம்பரத்தை பா.ரஞ்சித் தான் இயக்கி இருப்பார் என்றும், இனி 3 ரோசஸ் விற்பனை அவ்வளவு தான் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால், உண்மையில் இந்த விளம்பரத்திற்கும் பா.ரஞ்சித்திற்கு சம்பந்தம் இல்லை.