2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் ‘2.0 படத்தை வெளியிடுவோம்’ என தமிழ் ராக்கர்ஸ் பெயரில் தகவல்கள் உலா வந்தபோது, அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. சுமார் 600 கோடி பட்ஜெட்டில் இரண்டு வருடமாக கடின உழைப்பை போட்டு, இந்திய சூப்பர்ஸ்டார்களையும், ஆஸ்கார் வின்னர்களை வைத்து தாறுமாறான சயின்ஸ் பிக்ஷன் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். 

போட்ட காசை எடுக்க படாத பாடு படும் நிலையில், புதிய படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்டு மொத்த வசூலுக்கு சூனியம் வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட்டுக்கு ஆப்படிக்கும் விதமாக, லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள 2.0 படத்தை முறைகேடாக 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்திருந்தனர்.

குறிப்பாக தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம், தன்னுடைய இணையதள முகவரியில் உள்ள எழுத்துகளை மாற்றம் செய்து தொடர்ச்சியாக புதிய படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, “புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிடக் கூடாது எனப் பல முறை நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அந்த உத்தரவைச் சுட்டிக்காட்டியே 'தமிழ் ராக்கர்ஸ்' சவால் விட்டுப் புதிய படங்களை வெளியிட்டு வருகிறது” என லைகா நிறுவனம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, ‘இணையதள முகவரியில் மாற்றம் செய்து புதிய படங்களை வெளியிடும் ‘தமிழ் ராக்கர்ஸ்'க்கு சொந்தமான சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையதளங்கள் உட்பட 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் 2.0 படத்தை வெளியிடத் தடை விதித்து இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.