18-வது சர்வதேச திரைப்பட விழா நிறைவு! விருதுகளை அள்ளிய 'என்றாவது ஒருநாள்'!
சென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நாளான இன்று சிறந்த படங்கள், கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா மிக சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நாளான இன்று சிறந்த படங்கள், கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா மிக சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
இந்த விழாவில் இம்முறை திரையிட்ட படங்களில் சிறந்த படமாக 'என்றாவது ஒருநாள்' படம் தேர்வாகி, தமிழ் சினிமாவிற்கு பெருமை தேடித்தந்தது. ஏற்கெனவே இப்படம் 33 சர்வதேச விருதுகளை வாங்கி இருக்கிறது. என்றாவது ஒருநாள் படத்தை மிக கச்சிதமாக எழுதி இயக்கி தயாரித்திருந்தார் வெற்றி துரைசாமி.
இப்படத்தில் விதார்த், ரம்யா நம்பீசன் நாயகன் நாயகியாக நடித்திருந்தனர். விழாவில் இயக்குநர் வெற்றி துரைசாமிக்கு விருதும் சான்றும் பணமுடிப்பும் வழங்கப்பட்டது. தமிழ்படங்கள் இப்படியான அங்கீகாரத்தைப் பெறுவதென்பது இனிவரும் கலைஞர்களுக்கு பெரும் படைப்பூக்கத்தை கொடுக்கும் என்பதில் மாற்றமில்லை. விழாவில் வழங்கிய விருதை ஏற்றுக்கொண்டு, என்றாவது ஒருநாள் படத்தை இயக்கி தயாரித்திருந்த வெற்றி துரைசாமி பேசும்போது,
"இந்தப்படம் சிறந்தபடம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகை என வெவ்வேறு கேட்டகிரியில் இதுவரை 33 விருதுகளைப் பெற்றிருக்கிறது. இப்படி உலகத்திரைப்பட விழாக்களில் 33 சர்வதேச விருதுகளை வென்றிருந்தாலும் நம்ம சென்னையில் நடைபெற்ற திரைப்படவிழாவில் விருது பெற்றிருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவொரு நல்ல மோட்டிவேசன். நல்லபடங்களை தொடர்ந்து எடுப்பதற்கு இந்தவிருது பெரும் முனைப்பாக இருக்கும். அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.
18வது சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் இயக்குநருமான தங்கராஜிடம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிறைவு விழாவில், நடிகை சுகன்யா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.