விவசாயிகள் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் கிடைக்கும் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
Tamil Nadu Farmers will now Get crop Loans On One Day: தமிழ்நாடு அரசு விவசாயிகள் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கியுள்ளது. இணைய வழியில் பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதியமான்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் இனி விவசாயிகள் விண்ணப்பித்த நாள் அன்றே பயிர்க்கடன் பெற்றுக் கொள்ள முடியும்.
விண்ணப்பித்த நாளன்று பயிர்க்கடன்
விவசாயிகள் முன்பு வங்கிகளுக்கு சென்று பயிர்க்கடனுக்கு விண்ணப்பித்தால் குறைந்தபட்சம் 7 நாள் வரை ஆகும். ஆனால் இப்போது முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் மூலம் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் கிடைக்கும். முதல்வர் தொடங்கி வைத்த திட்டத்தின் மூகம் அதிகப்பட்சம் ரூ 5 லட்சம் வரை பயிர்க்கடன் கிடைக்கும். தர்மபுரி மாவடத்தில் தொடங்கிவைக்கப்பட்டுள்ள திட்டம் விரைவில் மற்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும்.
பயிர்க்கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
விவசாயிகள் பயிர்க்கடன் பெற நேரடியாக தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகலாம். மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது சில தனியார் வங்கிகளின் வேளாண்மைக் கடன் பிரிவுகளை அணுகியும் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசின் உழவன் செயலி மற்றும் சில வங்கிகளின் இணையதளங்கள் மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பயிர்க்கடன் பெற நிபந்தனைகள்
பயிர்க்கடன் பெற தமிழ்நாடு விவசாயியாக இருக்க வேண்டும். சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் அல்லது குத்தகைதாரர்கள் பயிர்க்கடன் பெற முடியும். மேலும் ஒரே குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயிர்க்கடன் பெற முடியும். பயிர்க்கடன் பெறும் விவசாயியின் வயது 18 முதல் 60க்குள் இருக்க வேண்டும்.ஏற்கனவே வேறு வங்கிகளில் கடன் சரியாக செலுத்தி இருக்க வேண்டும்.
ரூ.5 லட்சம் வரை பயிர்க்கடன்
தமிழ்நாடு அரசின் பயிர்க்கடன் பெற அடங்கல் அல்லது இ-அடங்கல், சிட்டா. ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை ஆவணங்களாக அளிக்க வேண்டும். ரூ.5 லட்சம் வரை பயிர்க்கடன் கிடைக்கும். ஆனால் பயிர் வகை மற்றும் சாகுபடி நிலத்தின் பரப்பளவைப் பொறுத்து இந்த தொகை மாறுபடும். கடன் தொகையை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் வட்டி மானியம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
