- Home
- Business
- Invest 1000 Rupees Scheme: ரூ.1,000 போதும்.. வங்கிகளை மிஞ்சும் வட்டி தரும் தபால் நிலைய திட்டம்
Invest 1000 Rupees Scheme: ரூ.1,000 போதும்.. வங்கிகளை மிஞ்சும் வட்டி தரும் தபால் நிலைய திட்டம்
Invest 1000 Rupees Scheme : வெறும் ரூ.1,000 முதலீட்டில் தொடங்கக்கூடிய தபால் நிலைய திட்டம், 7.5% வட்டி வழங்குவதால் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வங்கி பிக்சட் டெபாசிட்களை விட அதிக வருமானம் வழங்குவது இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.

அதிக வட்டி தரும் தபால் நிலைய திட்டம்
பாதுகாப்பான முதலீட்டை விரும்பும் மக்களுக்கு மத்திய அரசு மீண்டும் ஒரு நிம்மதியான செய்தியை வழங்கியுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் 2026 காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், 5 ஆண்டு கால தபால் நிலைய டைம் டெபாசிட் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.5% வட்டி தொடர்ந்து வழங்கப்படும்.
ஏன் இந்த திட்டம் கவனம் பெறுகிறது?
சமீப காலங்களில் வங்கி நிரந்தர வைப்புத் தொகைகளின் (பிக்சட் டெபாசிட்) வட்டி விகிதங்கள் குறைந்த நிலையில், அதிக வருமானத்துடன் பாதுகாப்பையும் வழங்கும் திட்டங்களை முதலீட்டாளர்கள் தேடி வருகின்றனர். இந்த சூழலில், தபால் நிலைய டைம் டெபாசிட் திட்டம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அரசு ஆதரவுடன் செயல்படுவதால் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் நம்பிக்கையையும் வழங்குகிறது.
வங்கிகளை விட அதிக வருமானம்
5 ஆண்டு கால தபால் நிலைய டெபாசிட்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இதே காலத்திற்கான பல முன்னணி வங்கிகளின் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் இதைவிட குறைவாக உள்ளன. இதனால் நீண்டகால சேமிப்பை திட்டமிடுபவர்களுக்கு இந்த திட்டம் ஒரு மாற்று வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் 1, 2 மற்றும் 3 ஆண்டு கால திட்டங்களிலும் போட்டித்தன்மை கொண்ட வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.
யார் கணக்கு தொடங்கலாம்?
இந்த திட்டத்தில் எந்த இந்திய குடிமகனும் கணக்கு தொடங்கலாம். தனிநபர் கணக்கு, கூட்டு கணக்கு, குழந்தைகளுக்கான கணக்கு உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. வெறும் ரூ.1,000 முதலீட்டில் தொடங்கலாம் என்பதே இதன் பெரிய பலம். அதிகபட்ச முதலீட்டிற்கு எந்த உச்சவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை.
வரிச்சலுகையும் கூடுதல் பலனும்
5 ஆண்டு டைம் டெபாசிட் திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் வரிச்சலுகை. பழைய வருமான வரி முறையை தேர்வு செய்தவர்களுக்கு வருமான வரிச் சட்டம் 80C பிரிவின் கீழ் கழிவு பெறும் வாய்ப்பு உள்ளது. அரசு உத்தரவாதம், நிலையான வட்டி வருமானம் மற்றும் வரிச்சலுகை ஆகிய மூன்று அம்சங்களும் இணைவதால், பாதுகாப்பான முதலீட்டாளர்களுக்கு தபால் நிலைய டைம் டெபாசிட் திட்டம் தொடர்ந்து முக்கிய தேர்வாக இருந்து வருகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

