ஒட்டகப்பால் டீ விற்பனை கடையை கோவையில்  இளைஞர் ஒருவர் துவக்கியுள்ள நிலையில் அப்பகுதி மக்கள் இளைஞரின் புதிய முயற்ச்சிக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர்.

வெற்றிக் கொடி கட்டு என்ற திரைப்படத்தில் டீ மாஸ்டரிடம் ஒட்டகப் பாலில் டீ போடுமாறு நடிகர் வடிவேலு கூறும் நகைச்சுவை காட்சி ஒன்று இடம்பெற்று இருக்கும். அந்தக் காட்சியை மெய்ப்பிக்கும் வகையில் கோவையில் ஒட்டகப் பால் டீ விற்பனையானது செய்யப்பட்டு வருவது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கோவை சூலூர் அடுத்த நீலம்பூர் புறவழிச் சாலையில் ஒட்டகங்களைக் கொண்டு பால் பொருள்கள் விற்பனை செய்யும் ஒட்டக பால் பண்ணையை மணிகண்டன் என்பவர் கடந்த சில வாரங்களாக நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் ஒட்டகங்கள் தவிர குதிரை, முயல், வாத்து, கோழி ஆகியவை வளர்க்கப்பட்டு வருகின்றன. காலை,மாலை வேளைகளில் ஒட்டகத்திலிருந்து பால் கறந்து நேரடியாக ஒட்டகப்பால் டீ விற்பனையும் நடைபெறுகிறது. இந்த ஒட்டகப்பால் டீ சாப்பிடுவதற்காக கோவை மக்கள் அந்த பகுதியில் அதிகளவில் குவிந்திட்டு வாராங்க ஆனால் இதில் ஒன்று தான் பிரச்சனை, நாம் சாதாரனமாக டீ குடிக்கும் டீ யின் விலை 10 ரூபாய் இங்கோ ஒட்டகப்பால் டீயின் விலையோ 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து பண்ணை உரிமையாளர் மணிகண்டன் கூறும்போது, குஜராத் மாநிலத்திலுள்ள கட்ச் மாவட்டத்தில் இருந்து 6 ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், எல்லா சூழலிலும் வாழக்கூடிய வகையில் ஒட்டகங்கள் இருப்பதால் இங்கு சிரமமின்றி பராமரிக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும் இங்குள்ள ஒட்டகங்களில் இருந்து கறக்கப்படும் பாலைக் கொண்டு பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.மேலும் ஒட்டகப்பால் டீ குடிக்க நிறைய பேர் ஆர்வமாக வருவதாகவும் கூறினார்.