கார்னகி இந்தியாவின் உலகளாவிய தொழில்நுட்ப உச்சிமாநாட்டில், AI வளர்ச்சியின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆசிரியர்: ஸ்ருதி மிட்டல் (கருத்து)

கார்னகி இந்தியா நடத்திய உலகளாவிய தொழில்நுட்ப உச்சிமாநாடு – இன்னோவேஷன் டயலாக் 2025, இந்த ஆண்டு AI வளர்ச்சியின் எதிர்காலம் குறித்த முக்கிய விவாதங்களுக்கு மையமாக அமைந்தது. இந்த உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட முக்கிய குழு விவாதத்தின் பெயர் “பயன்பாடுகளுக்கு ஆற்றல் தரும் முதுகெலும்பு: கம்ப்யூட் மற்றும் அதன் சிக்கல்கள்”. இந்த விவாதத்தில், AI வளர்ச்சிக்குத் தேவையான கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்பு எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அவற்றின் தாக்கம் குறித்து ஆழமான பகுப்பாய்வு செய்யப்பட்டது. ஆப்பிரிக்காவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்கும் டேட்டா சென்டர்களை உருவாக்கிய அனுபவங்கள், அரசாங்கங்களுக்கு டிஜிட்டல் மாற்றத்திற்கான ஆலோசனைகள் வழங்கிய தருணங்கள், மற்றும் இந்தியாவில் டிஜிட்டல் பொதுப் பொருட்களை உருவாக்கியது போன்ற அம்சங்கள் இந்த விவாதத்திற்கு அடிப்படையாக அமைந்தன. இந்த குழு விவாதத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் தெளிவாக வெளிப்பட்டன.

கம்ப்யூட் தற்சார்பு தேவை, சார்ந்திருப்பதால் வரும் ஆபத்துகள்

ஏற்கனவே கம்ப்யூட் திறன் என்பது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஒரு விஷயமாக மாறியுள்ளது. உள்நாட்டு கம்ப்யூட் வசதிகள் இல்லையென்றால், மற்ற நாடுகளின் தொழில்நுட்ப நிறுவனங்களை முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இது நீண்டகால ஆபத்துகளுக்கு வழிவகுக்கும்.

ஆப்பிரிக்காவில் உள்ள டெவலப்பர்கள் ஏற்கனவே இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர். தேசியத் தேர்வுகளின் போது சில டிஜிட்டல் தளங்கள் திடீரென ஆஃப்லைன் ஆனதால், அவர்களின் திட்டங்கள் முழுமையாக முடங்கிப் போயின.

ஸ்டார்ட்அப்களின் நிலைமை இன்னும் மோசமானது. பெரிய சர்வதேச நிறுவனங்கள் விதிகளை மாற்றும்போதோ அல்லது அணுகலை நிறுத்தும்போதோ, அந்த ஸ்டார்ட்அப்களின் எதிர்காலம் ஆபத்தில் சிக்குகிறது.

அரசாங்கங்கள் முன் உள்ள உண்மையான கேள்வி, கிளவுட் சேவையைப் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதல்ல. கிளவுட் பயன்பாட்டிற்கும், உள்நாட்டு உள்கட்டமைப்புக்கும் இடையே சமநிலையை எப்படி எட்டுவது என்பதே உண்மையான சவால். பாதுகாப்பு, உளவு, சுகாதாரத் தரவுகள் போன்ற முக்கியமான தகவல்களை முழுமையாக வெளி நிறுவனங்களின் கைகளில் வைப்பது ஆபத்தானது. அதே நேரத்தில், கோவிட் காலம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் அதிக தேவைக்கு கிளவுட் சேவைகள் அவசியமாகின்றன. அதனால்தான் நிபுணர்கள் பரிந்துரைத்த தீர்வு... இறையாண்மை மிக்க மைய உள்கட்டமைப்பு, எட்ஜ் தீர்வுகள், மற்றும் தேவைப்படும் இடங்களில் மட்டும் கிளவுட் பயன்பாடு ஆகியவற்றை இணைத்த ஒரு பன்முக உத்தி.

அதிக சக்தி அல்ல… புத்திசாலித்தனமான பொறியியல் தேவை

இந்த விவாதத்தில் வெளிப்பட்ட மற்றொரு முக்கிய அம்சம் — கம்ப்யூட்டை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது. ஒவ்வொரு AI பிரச்சனைக்கும் மிகப்பெரிய கம்ப்யூட்டிங் சக்தி தேவைப்படாது. ஒவ்வொரு முறையும் அதிகபட்ச துல்லியத்தை அடைய வேண்டிய அவசியமும் இல்லை. உதாரணமாக, பொது சுகாதாரத் துறையில் அடிக்கடி வரும் கேள்விகளை கேச் (cache) செய்வது, மொபைல் போன்களில் செயல்படும் வகையில் மாடல்களைச் சுருக்குவது போன்ற வழிமுறைகள் செலவைக் குறைக்கும். சேவைகளை அதிக மக்களுக்குக் கிடைக்கச் செய்யும்.

வடிவமைப்பு முடிவுகள் இங்கு மிகவும் முக்கியமானவை. வெறும் 1-2 சதவீதம் துல்லியத்தை மேம்படுத்துவதற்காக அதிக செலவு செய்வது பெரிய பலனைத் தராமல் போகலாம்.ஒரு பரிசோதனைக் கருவி 90 சதவீதம் துல்லியமாக இருந்து, சரியான நேரத்தில் பரிந்துரைகளை வழங்க முடிந்தால், அதுவே போதுமானது. இங்கு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்றே ஒன்றுதான்... பிரச்சனைக்குத் தீர்வு காண எவ்வளவு கம்ப்யூட் தேவையோ அதை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும். கம்ப்யூட் என்பது இலக்கு அல்ல, அது ஒரு கருவி மட்டுமே. குறைந்த வளங்கள் உள்ள பகுதிகளிலும் செயல்படும் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற திசையில் சிந்தனை மாற வேண்டும்.

AI மாடல்களில் மறைந்திருக்கும் கலாச்சாரத் தாக்கம்

இந்தக் குழு விவாதத்தில் குறிப்பிடப்பட்ட மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் — AI மாடல்கள் நடுநிலையானவை அல்ல. எந்த சமூகம் அவற்றை உருவாக்குகிறதோ, அந்த சமூகத்தின் மதிப்புகள் அவற்றில் பிரதிபலிக்கும். உதாரணமாக, பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவது ஆப்பிரிக்க கலாச்சாரத்தில் ஒரு முக்கிய அம்சம். மற்ற பகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்ட மாடல்களில் இந்த மதிப்பு காணப்படாமல் போகலாம்.

வெளிநாட்டு மாடல்களின் ஆதிக்கம் அதிகரித்தால், உலகின் கலாச்சார பன்முகத்தன்மை மெதுவாக மங்கிப்போகும் அபாயம் உள்ளது. அன்றாட டிஜிட்டல் பயன்பாடுகளில் மற்ற நாடுகளின் முன்னுரிமைகள் அமைதியாக ஊடுருவக்கூடும்.

இங்குள்ள முக்கிய கேள்வி, டிஜிட்டல் எதிர்காலத்தை யாருடைய மதிப்புகள் வடிவமைக்கும்? கம்ப்யூட் அணுகல் சில பகுதிகளில் மட்டுமே குவிந்திருந்தால், அந்தப் பகுதிகளின் கலாச்சாரம் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும். மொழிகள், உள்ளூர் பழக்கவழக்கங்கள், மற்றும் சமூகப் பின்னணிகளை மாடல்களில் சேர்க்கும்போதுதான் உண்மையான டிஜிட்டல் தற்சார்பு சாத்தியமாகும்.

நடைமுறைச் செயல்பாடு அவசியம். இந்த விவாதத்தில் வெளிவந்த அம்சங்கள் வெறும் கோட்பாடுகள் அல்ல. இவை நிஜ வாழ்க்கையில் AI திட்டங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுமா அல்லது பைலட் கட்டத்திலேயே நின்றுவிடுமா என்பதைத் தீர்மானிக்கும்.

* கொள்கை வகுப்பாளர்கள் முன் உள்ள பொறுப்பு — தற்சார்பைப் பாதுகாத்து, தேவையான நெகிழ்வுத்தன்மையை வழங்கும் உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது.

* கண்டுபிடிப்பாளர்களுக்கு உள்ள சவால் — குறைந்த வளங்களிலும் செயல்படும் வடிவமைப்புகளுடன் மாடல்களை உருவாக்குவது.

* சமூகம் அங்கீகரிக்க வேண்டிய ஒரு உண்மை. கணினித் தொழில்நுட்பம் என்பது வெறும் ஆற்றலைப் பற்றியது மட்டுமல்ல. அது எதிர்காலத் தலைமுறையினருக்குக் கடத்தப்படவிருக்கும் விழுமியங்களின் ஒரு ஊடகமாகவும் இருக்கிறது.

ஆசிரியர் அறிமுகம்

ஸ்ருதி மிட்டல் கார்னகி இந்தியாவில் ஒரு ஆராய்ச்சி ஆய்வாளர்.

அவரது ஆராய்ச்சித் துறைகள் — செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள், கம்ப்யூட், மற்றும் தரவு ஆளுகை.

குளோபல் சவுத் நாடுகளில் திறந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் சமூக-பொருளாதாரப் பயன்கள் குறித்த ஆய்விலும் அவர் ஆர்வம் காட்டுகிறார்.