அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் பராமரிப்புப் பணிகளில் தனது நிறுவனம் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை துருக்கி மறுத்துள்ளது. பி777 விமானங்களுக்கு மட்டுமே பராமரிப்புச் சேவை வழங்குவதாகக் கூறியுள்ளது.
இந்த வாரம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் பராமரிப்புப் பணிகளில் தனது நிறுவனம் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை துருக்கி மறுத்துள்ளது. போயிங் 787-8 ரக பயணிகள் விமானத்தின் பராமரிப்புப் பணிகளை 'துருக்கிய டெக்னிக்' (Turkish Technic) மேற்கொண்டதாகக் கூறப்படும் தகவல் தவறானது என்று துருக்கி தெரிவித்துள்ளது.
"விபத்துக்குள்ளான விமானத்தை துருக்கிய டெக்னிக் பராமரித்ததாகக் கூறப்படும் கூற்று, துருக்கி-இந்தியா உறவுகள் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பிழையாக வழிநடத்தும் ஒரு தவறான தகவல் ஆகும்" என்று துருக்கியின் தகவல்களைத் தவறாகப் பரப்பும் இயக்குநரகம் வெள்ளிக்கிழமை எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உள்பட குறைந்தது 270 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் துருக்கியின் தொடர்பு குறித்த விமர்சனங்கள் எழுந்த நிலையில், துருக்கி அதனை மறுத்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை பிற்பகல் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட விமானம் பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பயணி அதிசயமாக உயிர் தப்பினார்.
ஏர் இந்தியா - துருக்கி டெக்னிக் ஒப்பந்தம்:
"2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஏர் இந்தியா மற்றும் துருக்கிய டெக்னிக் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி, பி777 வகை அகன்ற உடல் விமானங்களுக்கு மட்டுமே பராமரிப்புச் சேவைகள் வழங்கப்படுகின்றன. விபத்தில் சிக்கிய போயிங் 787-8 ட்ரீம்லைனர் இந்த ஒப்பந்தத்தின் வரம்பிற்குள் வரவில்லை. இன்றுவரை, துருக்கிய டெக்னிக் இந்த வகையிலான எந்த ஏர் இந்தியா விமானத்திற்கும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை," என்றும் துருக்கி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்திற்கு சமீபத்திய பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட நிறுவனம் குறித்து தாங்கள் "அறிவோம்" என்று துருக்கி தகவல்களைத் தவறாகப் பரப்பும் இயக்குநரகம் கூறியது. ஆனால், "மேலும் ஊகங்களைத் தவிர்க்க இந்த விஷயத்தில் ஒரு அறிக்கை வெளியிடுவது தங்கள் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது" என்றும் அது குறிப்பிட்டது.
"தகவல்களைத் தவறாகப் பரப்பும் இயக்குநரகம், சர்வதேச அளவில் துருக்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எங்கள் முக்கிய பிராண்டுகளின் நற்பெயரைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் தொடர்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். துருக்கி மக்கள் என்ற முறையில், இந்தத் துயர விமான விபத்தில் இந்திய மக்களின் துயரத்தில் நாங்கள் மனதார பங்கேற்கிறோம்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துருக்கியின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு:
இந்தியாவில் உள்ள ஒன்பது முக்கிய விமான நிலையங்களில் சேவைகளைக் கையாண்ட செலேபி கிரவுண்ட் ஹேண்ட்லிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற துருக்கிய நிறுவனத்தின் உரிமம் ஒரு மாதத்திற்குப் பிறகு முன் திரும்பப் பெறப்பட்டது.
இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் துருக்கி பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு எடுத்ததை அடுத்து இந்ந நடவடிக்கை எடுக்கப்பட்டது. மே 8ஆம் தேதி பாகிஸ்தான் இந்தியா மீது ஏவிய பெரும்பாலான ட்ரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டது.
