தங்கள் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு பரிசு… மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமையாசியர் அதிரடி!!

Apr 16, 2023, 5:22 PM IST

தங்களது பள்ளியில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும் என்று சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை புதிதாக சேர்க்கப்படும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் அந்த மாணவ மாணவிகளுள் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஊக்கப் பரிசாக ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்று அந்தப் பள்ளி சார்பில் துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு அப்பகுதியில் வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: மீனாட்சியம்மன் கோயில் யானை உடல்நிலை எப்படி இருக்கிறது? - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

இந்த பள்ளியில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தலைமையாசிரியராக இந்திரா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த பள்ளியில் ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி மாணவர் அறிமுக விழா போன்றவை நடத்தப்பட்டு அந்த கல்வியாண்டில் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் பரிசு வழங்குதல் போன்ற பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வருடமும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த கல்வியாண்டில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருச்சியில் மாநாடு.! இபிஎஸ் தலைமையில் ஆட்சி..! செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள் என்ன தெரியுமா.?

மேலும் சேர்ந்த மாணவர்களில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் 15.07.2023 கல்வி வளர்ச்சி நாள் அன்று குழுக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவருக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என்றும்   மேலும் இந்த வருடம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இலவச வேன் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று அந்த துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த துண்டறிக்கைகளை தலைமையாசிரியர் இந்திரா அப்பகுதியில் உள்ள வீடுகள் தோறும் வழங்கி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார்.தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகள் போன்றவற்றை ஆசிரியர்கள் இணைந்து தங்களது சொந்த செலவில் மாணவர்களுக்காக வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.