காசு கொடுத்து வாங்கிய பிஸ்கட்டில் குறை; புகாரளித்த இளைஞரை நெகிழ செய்த நிறுவனம்

Nov 13, 2023, 11:50 PM IST

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடையில் வசிக்கும் முகமதுநாசர் என்பவர் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் விடுமுறையில் ஊருக்கு வந்த நிலையில் பண்டாரவாடை கடைவீதியில் உள்ள ஒரு கடையில் பத்து ரூபாய்க்கு பிஸ்கட் பாக்கெட் இரண்டு வாங்கி உள்ளார். அந்த பிஸ்கட் பாக்கெட்டில் பேக்கிங் சரியான முறையில் இருந்தும் எக்ஸ்பிரிடேட் இன்னும் முடியாமல் இருக்கும் பிஸ்கட்கள் மொறுமொறுப்பு இல்லாது நமத்துபோய் இருந்ததால் உடனடியாக அந்த பிஸ்கட் பாக்கெட் கம்பெனிக்கு புகார் அளித்துள்ளார்.

அதனை அந்த கம்பெனி ஆய்வு செய்து அவர் புகார் அளித்த பத்து நாட்களுக்குள் பார்சல் ஒன்றை அவர் இல்லத்திற்கு கொரியர் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். அதனை பிரித்து பார்த்தபோது அதில் ஏராளமான பிரிட்டானியா பிஸ்கட் வகைகள் இருப்பதைக் கண்டு அந்த இளைஞர் ஆச்சரியமும், ஆனந்தம் அடைந்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்த புகாரை ஏற்று இந்த பிஸ்கட் கம்பெனி வாடிக்கையாளர்களுக்கு  உடனடியாக பதில் அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், ஒவ்வொரு கம்பெனியும் இவ்வாறு துரிதமாக செயல்பட்டால் வாடிக்கையாளர்கள் சிரமப்பட வேண்டியது இல்லை எனவும் தெரிவித்தார். 

இரண்டு 10 - ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கு பதிலாக ரூ.250 மதிப்புள்ள பிஸ்கெட் வகைகளை அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுத்த தனியார் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.