Watch : கலப்புத் திருமணம் செய்த தம்பதியை ஒதுக்கி வைத்த கிராமம்! நடவடிக்கை எடுக்கக்கோரி தம்பதி புகார்!

Apr 11, 2023, 12:46 PM IST

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரும் ஏற்காட்டில் வசித்து வந்த மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த ஜானகி என்பவரும் காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு அரசம்பாளையம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக செந்தில்குமார் குடும்பத்தினர் ஊர் திருவிழா மற்றும் நல்லது கெட்டது என எதிலும் கலந்து கொள்ள முடியாமலும், அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமலும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி ஏற்காட்டில் வசித்து வருகின்றனர்.



இது குறித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் காவல்துறையினரும் தங்களை மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தனர். ஊர் தர்மகத்தாக்களான ரவிக்குமார், அய்யாவு, மணி, மற்றும் பழனிச்சாமி ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி செந்தில்குமார் தனது குடும்பத்தினருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.