கூட்டத்தில் சீறிப்பாய்ந்த காளை; தெறித்து ஓடிய தொண்டர்கள்; நொடிப்பொழுதில் கட்டுப்படுத்திய அண்ணாமலை

Aug 4, 2023, 12:24 PM IST

என் மண், என் மக்கள் என்ற பெயரில்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொணடு வரும் நிலையில் இன்று மதுரை மாவட்டத்தில் பாதையாத்திரை மேற்கொண்டு வருகிறார். தற்போது மதுரை மேலூர் அரசு கலைக்கல்லூரி அருகே பாதயாத்திரை துவங்கியுள்ளது. இதில் ஏராளமான பாஜக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

பாதயாத்திரை தொடங்கும் இடத்தில் 10க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை கட்டி வரவேற்பு அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பாஜக தலைவர் அண்ணாமலை காளை அருகே சென்றதும் ஒரு காளை திடீரென எகிறி துள்ளியது. உடனடியாக அருகில் இருந்த தொண்டர்கள் பயந்து விலகிய நிலையில் அண்ணாமலை சிறிதும் தாமதிக்காமல் காளையை லாவகமாக தடவிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். 

தொடர்ந்து பாதயாத்திரையானது சந்தைப்பேட்டை பெரிய கடை வீதி, நகைக்கடை பஜார், சிவன் கோவில், செக்கடி, அழகர் கோவில் ரோடு வழியாக மேலூர் பஸ் நிலையத்தை சென்றடைகிறது. வழிநெடுகிலும் நடைபயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆரத்தி எடுத்தும், மலர்கள் தூவியும் பொதுமக்கள் வரவேற்பு கொடுத்தனர்.