இலவச பேருந்தால் வாழ்வாதாரம் பாதிப்பு; மினி பஸ் ஓட்டுநர்கள் மனு

Jan 12, 2023, 5:29 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் வட்டார மினி பேருந்து ஓட்டுநர்கள் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது, கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் மினி பேருந்துகள் கிராம மக்கள் நல்வாழ்விற்காக அரசின் கொள்கை அடிப்படையில் விடப்பட்டது. தற்போது தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் அரசு கொள்கை அடிப்படையில் மகளிர் முன்னேற்றத்திற்காக இலவச பேருந்துகளை இயக்கி வருகிறது. 

மேற்படி கொள்கைகளை ஏற்றுக்கொண்டு நாங்களும் மினி பேருந்துகளை குறைந்த கட்டணத்தில் இயக்கி வந்தோம். தற்போது அரசு போக்குவரத்து  கழகம் மினி பேருந்துகளை குறிவைத்து இலவச பேருந்துகளை இயக்கி வருவதால் எங்கள் வாழ்வாதாரத்தை நாங்கள் இழந்து வருகிறோம். குடும்பங்களை நடத்த முடியாத நிலையில் உள்ளோம். மேலும் மினி பேருந்து உரிமையாளர்களும் எங்களை கைவிட்டு விட்டனர். எங்களுக்கு வேறு எந்த வேலையும் தெரியாது. நாங்கள் குடும்பத்துடன் வாழ்வதற்கு மாற்று பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.