Watch : பேருந்து ஓட்டத் தெரியாமல் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய எம்எல்ஏ! அலரியடித்து ஓட்டம் பிடித்த பொதுமக்கள்!

Apr 4, 2023, 5:33 PM IST

காஞ்சிபுரம் கீழ்கதிப்பூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய சார்பில் வேகவதி ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பாளர்களுக்கென 2112 அடுக்குமாடி குடியிருப்புகள் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டன. இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீட்டினர் குடிபெயர்ந்து வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இக்குடியிருப்பு வாசிகள் அடிப்படை தேவைகள் எதுவுமின்றி வசித்து வருவதாகவும், குறிப்பாக போக்குவரத்து வசதியின்றி பள்ளி & கல்லூரி மாணவர்கள் தவித்து வருவதாகவும் இதனால் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர தொடர் கோரிக்கைகள் எழுந்து வந்தன.

இந்நிலையில், அக்குடியிருப்பு வாசிகளுக்கென பேருந்து சேவையினை துவங்கி வைக்க காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம். பி.எழிலரசன் வந்திருந்தார். அப்போது பேருந்து சேவையை தொடக்கி வைக்க பேருந்தில் ஏறி காஞ்சிபுரம் எம்.பி.செல்வம் உட்பட்ட கட்சியினர்,பொதுமக்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தனர். எம்எல்ஏ சிவிஎம்பி.எழிலரசன் பேருந்தினை ஓட்ட முற்பட்ட போது அங்கு குறுகிய வழியில் சற்று தூரம் சென்ற பேருந்து பக்கவாட்டிலிருந்த கால்வாய் ஒன்றில் இறங்கியது விபத்துக்குள்ளானது. இதனால் அதிர்ச்சியடைந்த கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் பேருந்திலிருந்து உடனடியாக வெளியேறி நிம்மதி பெருமூச்சி விட்டனர்.பயணிகள் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர்.