
மே 26, 2026 அன்று வாக்கிய பஞ்சாங்கத்தின்படி குரு பகவான் கடக ராசிக்கு குரு பெயர்ச்சியாக இருக்கிறார். கடக ராசி குரு பகவானின் உச்ச வீடாகும். கும்ப ராசிக்கு ஆறாம் வீடான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்க உள்ளார். கும்ப ராசியின் தன லாப அதிபதியான குரு பகவான் ஆறாம் இடத்திற்கு செல்வது என்பது சற்று சுமாரான பலனாகும்.
தன லாப கிரகம் ஆறாம் வீட்டில் உச்சமடைவது பொருளாதார ஏற்ற, இறக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இவர் தனது ஐந்தாம் பார்வையால் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் 12-ஆம் வீடான விரய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையால் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தையும் பார்க்க இருக்கிறார். இதனால் கும்ப ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என இங்கு காணலாம்.
பொதுவாக ஆறாம் வீட்டில் உச்ச கிரகங்கள் சஞ்சரிக்கும் பொழுது எதிரியை வெல்லக்கூடிய வலிமை உருவாகும். “ஆறில் குரு இருந்தால் ஊரில் பகை உருவாகும்” என்பது பழமொழி. ஆறில் குரு பகவான் வரும் காலங்களில் கடன் வாங்கி பகையை அதிகரிக்கலாம் அல்லது கடன் சுமை காரணமாக நோய்கள் அதிகரிக்கக்கூடும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் நிம்மதி குறையலாம்.
தன லாப அதிபதி ஆறாம் இடத்துடன் சம்பந்தப்படுவதால் குடும்ப உறுப்பினர்களிடமே கடன் பட நேரிடலாம். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். உங்கள் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டு தான் வெற்றிகளை பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையான உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும். பிறரிடம் பேசும் பொழுதும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் பொழுதும் மிக கவனமாக இருக்க வேண்டும்.
குருவின் ஐந்தாம் பார்வை கும்ப ராசியின் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பதிய இருக்கிறது. இதன் காரணமாக தொழிலில் நல்ல முன்னேற்றமும், வளர்ச்சியும் இருக்கும். பெரிய அளவில் வாடிக்கையாளர்கள் கிடைத்தாலும், லாபத்தை எதிர்பார்க்க முடியாது. விரயங்கள் அதிகரிக்கலாம். உங்களுக்கு பரிச்சயமான அல்லது கைதேர்ந்த தொழிலை மட்டுமே செய்யவும். புதிய தொழில் தொடங்கும் முடிவுகளை சிறிது காலத்திற்கு தள்ளிப் போடவும்.
தடாலடியான முடிவுகளை எடுக்கக் கூடாது. வேலை இழந்தவர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு சற்று கடினம் முயற்சிக்குப் பின்னரே மீண்டும் பணியில் சேரும் சந்தர்ப்பம் உண்டாகும். விடாமுயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும்.
குருவின் ஏழாம் பார்வை 12-ம் வீடான விரய ஸ்தானத்தில் விழ இருக்கிறது. இதன் காரணமாக உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் மறைமுக எதிர்ப்புகள் தோன்றும். தொழில் அல்லது உத்தியோகத்தில் எதிரிகளின் ஆட்டம் அதிகரிக்கும். ஒரு கடன் வாங்கி மற்றொரு கடனை அடைப்பீர்கள். இந்த காலகட்டத்தில் யாருடனும் பகைமை பாராட்ட வேண்டாம். பாகப்பிரிவினைகளில் உடன் பிறந்தவர்களுடன் முரண்பாடு ஏற்படலாம்.
பத்திரப்பதிவுகள் தாமதம் ஆகலாம். சொத்து பிரச்சனைகள் உங்களை வாட்டி வதைக்கலாம். நீங்கள் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். வீடு, வாகனம் வாங்குவதற்காக கடன் பெறலாம். உடன் பிறந்தவர்களின் கடனுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழல் உருவாகலாம். எனவே எதிலும் நிதானத்துடனும், நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டிய காலமாகும்.
தனம் வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானத்தில் உள்ள ராசியின் அதிபதி சனியின் மேல் குருவின் ஒன்பதாம் பார்வை விழுகிறது. இது கும்ப ராசிக்காரர்களுக்கு சற்று ஆதரவான பலன்களை ஏற்படுத்தித் தரும். குருவின் பிற பார்வைகளால் ஏற்பட்ட கஷ்டங்கள் குருவின் ஒன்பதாவது பார்வையால் மட்டுப்படுத்தப்படும். பங்குச் சந்தை மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். விவசாயம் சார்ந்த தொழில் செய்து வருபவர்களுக்கு வங்கிகளில் கடன் கிடைக்கும்.
நண்பர்கள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் பண உதவிகளைப் பெறுவீர்கள் நீண்ட கால முதலீடுகளை செய்வதற்கு சூழல் உண்டாகும். அரிதான சமயங்களில் நீங்கள் எதிர்பாராத வகையில் பணம் வந்து கைக்கு வந்து சேரும். ராசியில் ராகு இருப்பதால் திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கலாம். இருப்பினும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைப்பதை தவிர்த்து விடுங்கள்.
வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் கோச்சார கெடு பலன்கள் குறையும். வெள்ளிக்கிழமைகளில் வாராகி அம்மனை வழிபடுவது பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)