
மகர ராசியின் ஆறாம் வீட்டில் அருள் புரிந்த வந்த குரு பகவான் மே 26, 2026 வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இடம் பெயர்ந்து சம சப்தம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். மகர ராசிக்கு மூன்று மற்றும் 12ம் வீடுகளின் அதிபதியாக விளங்கும் குரு பகவான் குரு பெயர்ச்சிக்குப் பின்னர் ஏழாம் வீட்டில் உச்சம் பெறுகிறார். மேலும் தனது ஐந்தாம் பார்வையால் பதினோராம் வீடான லாப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் ராசியையும், ஒன்பதாம் பார்வையால் முயற்சி மற்றும் தைரிய ஸ்தானத்தையும் பார்க்க இருக்கிறார். இதன் காரணமாக மகர ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என இந்த பதிவில் பார்க்கலாம்.
குரு பகவான் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பது மகர ராசிக்காரர்களுக்கு இழந்த அனைத்தையும் மீட்டெடுக்கும் காலமாக இருக்கும். கிரகங்களின் சாதகமான நிலை காரணமாக புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். பொதுவாக ராசியை குரு பார்க்கும் காலங்களில் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் இருந்து வந்த சங்கடங்கள் அகலும். குருவின் நேரடி பார்வையால் கோடி புண்ணியங்கள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் அடைய வேண்டிய லட்சியங்கள், எண்ணங்கள், கனவுகளை நிறைவேற்ற சாதகமான காலம் கிடைக்கும்.
கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, புதியதாக பிறப்பெடுத்தது போன்ற உணர்வு ஏற்படும். வாழ்க்கை வளம் பெறும் வகையில் புதிய நட்புகள் கிடைக்கும். ஜாதக ரீதியான தோஷங்களும், சாபங்களும் விலகும். வெளியில் சொல்ல முடியாமல் தவித்த அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் மீளக்கூடிய சூழல்கள் உருவாகும். அபாரமான தொழில் வளர்ச்சிக்கும் வாய்ப்பு உண்டு. செய்வினை, கண் திருஷ்டி உள்ளிட்ட கோளாறுகள் நீங்கும். விதியை மதியால் வெல்லக்கூடிய மனவலிமையை குரு பகவான் உங்களுக்கு வழங்க இருக்கிறார்.
குருவின் ஐந்தாம் பார்வை பதினோராம் வீடான லாப ஸ்தானத்தில் பதிவதால் மனதில் இருந்த அத்தனை ஆசைகள் மற்றும் கனவுகளும் நிறைவேறத் தொடங்கும். எதிர்காலம் பற்றிய தைரியமும், நம்பிக்கையும் உண்டாகும். ஏற்றுமதி தொழில் செய்து வருபவர்களுக்கு வளர்ச்சி கிடைக்கும். தொழிலுக்கு அரசின் சார்பில் உதவியும், மானியமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தொழில் முனைவோர்களுக்கு வங்கி கடன் கிடைக்கலாம். புதிய தொழில் முயற்சிகளை செயல்படுத்த திட்டம் வகுப்பீர்கள். சிலருக்கு புதிய தொழில் கிளைகள் துவங்கும் வாய்ப்புகள் ஏற்படும். வருமானம் அபரிமிதமாக உயரும். தொழில் விரிவாக்கம் அல்லது சுப செலவுகள் ஏற்படலாம். கடன் பிரச்சினைகள் கணிசமாக குறையும். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட கௌரவக் குறைவு பிரச்சினைகள் அகலும்.
குருவின் ஏழாம் பார்வை ராசியின் மீது விழுகிறது. இதன் காரணமாக இழந்த செல்வங்கள் அனைத்தையும் மீட்டு எடுப்பீர்கள். உங்களிடமிருந்து பறிபோன நிம்மதி, மகிழ்ச்சி, சந்தோஷம் ஆகியவை மீண்டும் குடிபுகும். உங்கள் தோற்றம் பொலிவு பெறும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஜாதகத்தில் எத்தனை தடைகள் இருந்தாலும் அவை அனைத்தும் அகன்று, திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அதிக வாபம் கிடைக்கும் வகையில் புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
தொழிலில் இருந்த பகைவர்கள், எதிரிகள் விலகி ஓடுவார்கள். சகோதரர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் அகலும். தொழிலை லாபகரமான நிலைக்கு மாற்றிச் செல்வீர்கள். பதவி உயர்வு, உத்தியோகத்தில் இடமாற்றம் ஆகியவை ஏற்படலாம். இழந்த சொத்துக்கள் மீண்டும் கைக்கு வரும். கருத்து வேறுபாடால் பிரிந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்றிணைவீர்கள். கடன் பிரச்சனையால் இருந்த சுணக்க நிலைகள் மாறும். வீண் செலவுகள் குறையும். சேமிப்பு அதிகரிக்கும்.
குருவின் ஒன்பதாம் பார்வை மூன்றாம் வீடான தைரியம் மற்றும் சகாய ஸ்தானத்தில் விழுகிறது. இங்கு ராசியின் அதிபதி சனி பகவான் இருப்பதால் அவரின் மீது குரு பகவானின் பார்வை படுகிறது. இதன் காரணமாக தடைகள் விலகி மாற்றம் உண்டாகும். உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். விரும்பிய வகையில் வேலை மாற்றம் செய்வீர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் வாய்ப்புகள் உருவாகும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும்.
எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் காரிய சித்தி உண்டாகும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன்கள் வசூலாகும். சுப நிகழ்ச்சிகளில் இருந்து வந்த இழுபறிகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடக்கும். கண், காது, மூக்கு, தொண்டை தொடர்பான உடல் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு அதிலிருந்து முழுமையான விடுதலை கிடைக்கும்.
லட்சுமி நரசிம்மரை வழிபடுவது அனைத்து இன்னல்களில் இருந்தும் விடுதலையைப் பெற்றுத் தரும். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை உருவாக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)