"பாகிஸ்தானின் புதிய பிரதமர் யார்? நவாஸ் ஷெரிபின் சகோதரரா அல்லது மனைவியா?" தொடரும் குழப்பம்…!!
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவியிழந்ததையடுத்து, அடுத்த பிரதமராக அவரது சகோதரர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், நவாஸின் மனைவி குல்சூம் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி லண்டன் உள்ளிட்ட இடங்களில், சொத்துகள் குவித்த வழக்கில், அவர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, ஷெரிஃப் பதவி விலகியுள்ள நிலையில், அங்கு ஆட்சியைப் பிடிக்க ராணுவம் முயற்சி மேற்கொள்ளும் என்று அச்சம் எழுந்துள்ளது.
ஆனால் பாகிஸ்தானில் ஆட்சிமாற்றம் எளிதாக இருக்காது என்று இந்திய வெளியுறவுத்துறை கருதுகிறது.
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக நவாஸின் சகோதரரும், பஞ்சாப் மாகாணத்தின் முதல்வருமான ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்கலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நவாஸ் ஷெரீஃப்பின் மனைவி குல்சூம் நவாஸ், பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகிவுள்ளன.